செஸ் ஒலிம்பியாட் செலவு கணக்கை பொதுவில் வைக்கிறோம்.. அதிமுகவுக்கு அமைச்சர் மெய்யநாதன் சவால்!
சென்னை : செஸ் ஒலிம்பியாட் தொடர்பான செலவுகளை பொதுத் தளத்தில் வைக்கிறோம், யார் வேண்டுமானாலும் வந்து விசாரித்துக் கொள்ளலாம் என்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான அனைத்து பணிகளுமே, எவ்வளவு குறைவான செலவில் நடத்த முடியுமோ, அத்தனை குறைவாக செலவழித்து நடத்தியுள்ளோம் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக அரசு நடத்தியுள்ள செஸ் போட்டியில் முறைகேடு நடந்துள்ளது என குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பதில் அளித்துள்ளார்.
சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்பு பணிகளை விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று ஆய்வு செய்தார்.
’கட்டபஞ்சாயத்து ராஜா' ஓபிஎஸ் பின்னணியில் திமுக! எல்லாத்துக்கும் அவங்கதான் காரணம்! விடாத ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் ஊழல் நடந்துள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அதிமுக ஆட்சியாக இருந்தால் இதைவிட செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்தியிருப்போம், ஆனால் திமுக அரசு நடத்தியுள்ள செஸ் போட்டியில் முறைகேடு நடந்துள்ளது என குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பதில் அளித்துள்ளார்.
சென்னையில் முதல்முறையாக
சென்னையில் முதல் முறையாக அடுத்த மாதம் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதையொட்டி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய டென்னிஸ் மைதானத்தை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று ஆய்வு செய்தார். மேலும் இந்தப் போட்டிகள் நடத்துவது தொடர்பான மாதிரிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.
சர்வதேச தரத்தில்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் மெய்யநாதன், "தமிழக மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ள உலக மகளிர் டென்னிஸ் போட்டியை அரசு WTO உடன் இணைந்து நடத்த உள்ளது. சர்வதேச தரத்தில் டென்னிஸ் மைதானம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த மைதானத்தில் உள்ள விளக்குகள் ரூ.3 கோடி செலவில், சர்வதேச தரத்தில் புதுப்பிக்கப்படவுள்ளது. அடுத்த 15 நாட்களுக்குள் மைதானத்தை புதுப்பிக்கும் பணிகள் நிறைவடையும். வரும் செப்டம்பர் 8-ஆம் தேதியிலிருந்து மைதானத்தில் விளையாடலாம்.
சிறந்த நிர்வாகி
அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ரூ.500 கோடி செலவு செய்திருப்பார்கள். ஆனால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் வெறும் ரூ.114 கோடியில், மிகவும் குறைவாக செலவு செய்து நடத்திக் காட்டியுள்ளோம். இதன்மூலம் சர்வதேச அளவில் தமிழக முதல்வர் தான் ஒரு மிகச்சிறந்த நிர்வாகி என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார்.
Recommended Video
பொதுவில் வைக்கிறோம்
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான அனைத்து பணிகளுமே ,எவ்வளவு செலவு குறைவாக நடத்த முடியுமோ, அத்தனை குறைவாக செலவு செய்து நடத்தியுள்ளோம். ஒரு ரூபாய் செலவு செய்து மூன்று ரூபாய்க்கான பணிகள் நடைபெற்றுள்ளன. செஸ் ஒலிம்பியாட் தொடர்பான செலவுகளை பொதுத் தளத்தில் வைக்கிறோம். யார் வேண்டுமானாலும் வந்து விசாரித்துக் கொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.