'தமிழருக்கு பெருமை..' சிலம்பம் விளையாட்டுக்கு மத்திய அரசு அங்கீகாரம்.. அமைச்சர் மெய்யநாதன் தகவல்
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை ஏற்றுத் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் மத்திய அரசின் 'கேலோ இந்தியா' திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளதாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வீர விளையாட்டுகளில் ஒன்று சிலம்பம். பல நூறு ஆண்டு பழமையான இந்த விளையாட்டை ஆண்டு தோறும் பல நூறு மாணவர்கள் கற்று வருகின்றனர்.
இருப்பினும், சிலம்பத்திற்கு இதுவரை மத்திய அரசு அங்கீகாரம் வழங்காமலேயே இருந்தது. இது தொடர்பாகத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் சமீபத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
மத்திய அரசுக்கு எதிராக.. செப்டம்பர் 20-ல் திமுக, கூட்டணி கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் போராட்டம்!
கேலோ இந்தியா
இந்நிலையில், தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்தை 'கேலோ இந்தியா' திட்டத்தின் கீழ் சேர்த்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழர்களின் பாரம்பரிய பெருமைமிக்க சிலம்ப விளையாட்டைப் பாதுகாக்கவும், தமிழர்களின் வீரக்கலையான சிலம்பத்தை உலகறியச் செய்யும் நோக்கத்திலும், ஒன்றிய அரசின் "கேலோ இந்தியா" திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பட்டியலில் சேர்த்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுரையின்படி கோரப்பட்டது.
சிலம்பம் சேர்ப்பு
அதனையேற்று, சிலம்பம் விளையாட்டினை ஒன்றிய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விளையாட்டுத் துறை அங்கீகரித்து "புதிய கேலோ இந்தியா" திட்டத்தின் கீழான "விளையாட்டின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி ஊக்குவித்தல்" (Promotion of inclusiveness through Sports) என்ற கூறில் சிலம்பம் விளையாட்டினை சேர்த்துள்ளது.
தமிழர்களின் வீர விளையாட்டு
தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது. தமிழினத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டம் என்பது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். தற்போது ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தை ஆர்வமுடன் கற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் திருவிழாக்களிலும், கோயில் விழாக்களிலும் சிலம்ப விளையாட்டு தவறாது இடம் பெற்று வருகிறது.
ஏனைய பழங்குடியின விளையாட்டு
ஏனைய பழங்குடியின விளையாட்டுகளுடன் சேர்த்து சிலம்பத்தையும் மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய விளையாட்டு ஆணையத்தையும் (Sports Authority of India) கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.