சி ஏ ஏ எதிர்ப்பு போராட்டம்... வண்ணாரப்பேட்டை வர அமைச்சர் நிலோபருக்கு என்ன தயக்கம்?
சென்னை: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் 13-வது நாளாக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனிடையே இஸ்லாமிய பிரதிநிதித்துவ அடிப்படையில் அமைச்சராக உள்ள நிலோபர் கபில் இதுவரை வண்ணாரப்பேட்டை வராதது ஏன் என ஆவேசம் காட்டுகின்றனர்.
மேலும், பெண்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் நிலோபர் கபில் ஒரு பெண்ணாக இருந்தும் எப்படி மவுனம் சாதிக்க முடிகிறது என சரமாரி கேள்விகளை எழுப்புகின்றனர்.
13 நாள் போராட்டம்
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தொடங்கிய போராட்டம் சென்னை வண்ணாரப்பேட்டையில் 13-வது நாளாக இன்றும் தொடர்கிறது. டெல்லி ஷாகின் பாக் தொடர் போராட்டத்தை போல் சென்னை ஷாகின்பாக்காக மாறியுள்ளது வண்ணாரப்பேட்டை. குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும், காவல்துறையினர் நடத்திய தடியடியை கண்டித்தும் வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், இயக்கத் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
வேதனை
13 நாட்களாக போராட்டம் நடத்திக்கொண்டிருப்பது தெரிந்தும் தமிழக அரசு தரப்பில் இருந்து போராட்டக்களத்திற்கு யாரும் வரவில்லை என்றும், இது போராட்டத்தை கொச்சைப்படுத்தும் செயல் எனவும் வேதனை தெரிவிக்கிறார் சாதிக் என்பவர். மேலும், இஸ்லாமிய பிரதிநிதித்துவ அடிப்படையில் அமைச்சர் பதவியில் இருக்கும் நிலோபர் கபில், இந்த விவகாரத்தில் குறைந்தபட்சம் பேச்சுவார்த்தை நடத்தக்கூட வருகை தராதது ஏமாற்றம் தருவதாக கூறினார். சிறுபான்மையினர் கோட்டாவில் அமைச்சர் பதவி மட்டும் வேண்டும், ஆனால் அந்த இனம் ஒரு பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் போது ஆறுதல் கூட கூறமாட்டோம் என்பது என்ன நியாயம் என வினவினார்.
உறுதி
சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக்களத்திற்கு அதிமுக, பாஜகவை தவிர அனைத்து அரசியல் கட்சிகள் சார்பிலும் பிரதிநிதிகள் வந்து சென்றுள்ளதாகவும், அதிமுகவில் உள்ள அன்வர் ராஜா, தமிழ் மகன் உசேன், போன்றோர் தங்கள் தலைமையிடம் விவரம் எடுத்து சொல்வதை விடுத்து மவுனம் காப்பது ஏற்கத்தக்கதல்ல என கூறுகிறார் கலீம் என்பவர். உலகில் எங்கு போராட்டம் நடந்தாலும் அங்கு அரசு சார்பில் பிரதிநிதிகள் அனுப்பி வைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், ஆனால் தமிழகத்தில் மட்டும் விசித்திரமாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
தோல்வி
இதனிடையே அமைச்சர் ஜெயக்குமார் வண்ணாரப்பேட்டை போராட்டக்களத்திற்கு இதுவரை செல்லவில்லை என்றாலும் கூட, போராட்ட குழு பிரதிநிதிகள் ஓரிருவரை அழைத்து தனது அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அது தோல்வியில் முடிந்ததால் அதற்கு பிறகு அவர் இதில் தீவிரம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் மூலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு தரப்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டும் அது எதுவுமே வெற்றியடையவில்லை.