'2 கோடி வசூல்-னா 20 கோடி-ன்னு சொல்வாங்க' - அமைச்சர் பாண்டியராஜன் பதிலால் விஜய் ரசிகர்கள் ஷாக்!
சென்னை: தங்களது படம் வெற்றி பெற்றுவிட்டது என்று காட்டுவதற்காக 2 கோடி வசூல் வந்தாலும், 20 கோடி வசூலானதாக கணக்கு காட்டுவார்கள் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருக்கிறார்.
எங்க 'தல' படம் 130 கோடி வசூல்
எங்க 'தளபதி' படம் 180 கோடி வசூல்
எங்க 'தலைவர்' படம் 380 கோடி வசூல்
போன்ற வாசகங்களை மாஸ் ஹீரோக்களின் படங்கள் வெளியான பிறகு நீங்கள் அடிக்கடி கேட்கலாம்.
நீ பெருசா, நான் பெருசா, உன் மார்க்கெட் பெருசா, என் மார்க்கெட் பெருசா என்ற ஸ்டார் வேல்யூ பிம்பத்தை கட்டமைக்க, கட்டமைத்த பிம்பத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுச் செல்ல ஹீரோக்கள் கையாளும் உத்தி இது என்பது சினிமாவை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும்.
இந்த உத்திக்கு இலவச புரமோஷன் செய்பவர்கள் அவர்களது ரசிகர்கள். ரேஷன் கடைக்குச் சென்று அரிசி வாங்கிட்டு வரச் சொன்னால், இதோ ஒரு நிமிஷம் என்று சொல்லிவிட்டு, 'எங்காளு படம் 200 கோடி வசூல் சாதனை' என்று ட்வீட்டிவிட்டு தான் செல்வார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இப்படி பற்றி எரியும் காட்டுத் தீ போல சமூக தளங்களில் பரவும் வசூல் விவரங்கள் நிஜமாகவே சரியான தகவல் தானா? என்று கேட்டால், அதற்கு கண்டிப்பாக ஆதாரத்துடன் பதில் கிடைக்கவே கிடைக்காது.
ஆனால், இந்த கேள்விக்கான பதிலை வெளிப்படையாக போட்டுடைத்திருக்கிறார் அமைச்சர் பாண்டியராஜன். இன்று அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, 'மாஸ்டர்' திரைப்பட வசூல் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் பாண்டியராஜன், "திரைப்படங்கள் வெற்றிப் பெற்றது என்பதை காண்பிப்பதற்காக 2 கோடி வசூல் வந்தாலும் 20 கோடி வசூல் என்று கூறுவது இயல்பானது தான்" என்று போகிற போக்கில் வைரல் கண்டெண்ட்டை கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.
அமைச்சர் பாண்டியராஜனின் இந்த கருத்து நிதர்சனமான உண்மை என்றாலும், ரசிகர்களுக்கு தாங்கள் எந்தளவுக்கு சினிமா மோகத்தின் காரணமாக ஏமாற்றப்படுகிறோம், பயன்படுத்தப்படுகிறோம் என்பதை உணர வேண்டிய கட்டாயம் உள்ளது.
மாஸ்டர் வசூல்:
ஜனவரி 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியான விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் 5 நாட்களில் சுமார் 150 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுவும் தமிழகத்தில் மட்டும் 5 நாட்களில் 82 கோடி வசூல் என்றும் சென்னையில் 5 நாட்கள் முடிவில் 5.43 கோடி வசூல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் தமிழகம் முழுவதும் 50 சதவிகித இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், 5 நாட்களில் 80 கோடிக்கும் அதிகமான வசூல் எப்படி சாத்தியம்? என்று கேட்டால், தமிழகத்தில் 90 சதவிகித திரையரங்கில் மாஸ்டர் படம் தான் ரிலீசானது என்கிறார்கள். அதுவும், முதல் நாளில் 6, 7 ஷோ வரை ஓடியது என்றும், 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்றும் கூறுகிறார்கள்.
அப்படியெனில், கொரோனா காரணமாக 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற அரசாங்கத்தின் உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டதா?
இந்த வசூல் விவரங்கள் அனைத்தும் எப்படி கிடைத்தது என்று கேட்டால், ட்விட்டரில் வெரிஃபைட் செய்யப்பட்ட சினிமா நிபுணரின் டீவீட்டை கை காட்டுகிறார்கள்.
சரி அந்த நிபுணருக்கு யார் இந்த புள்ளி விவரங்களை கொடுத்தது? அப்படத்தின் தயாரிப்பாளரா?
இப்படி அடுக்கடுக்கான சாமானிய மக்கள் மனதில் எழும் கேள்விகளுக்கு தான் இன்று சிம்பிளாக ஒரே வரியில் பதில் அளித்திருக்கிறார் அமைச்சர் பாண்டியராஜன்.
இது வெறும் மாஸ்டர் படத்தின் வசூல் குறித்து மட்டும் எழுப்பப்படும் கேள்வி அல்ல. 71 வயது வரை இன்றும் உச்ச நட்சத்திரமாக விளங்கும் ரஜினிகாந்த் படங்கள் பற்றிய வசூல் வெளியீடு வரை என அனைத்து நடிகர்களின் படங்களுக்கும் இது பொருந்தும்.
இன்று கோலிவுட் உலகில் Tier-1 ஹீரோஸ் எனும் அந்தஸ்தினுள் நுழைய இதர ஹூரோக்கள் படாதபாடு பட்டு வருகின்றனர். அந்த அந்தஸ்தில் இருக்கும் ஹீரோக்கள், வேறு எவரும் அந்த வட்டத்திற்குள் வராமல் பார்த்துக் கொள்கின்றனர். இந்த போட்டி இருக்கும் வரை, உச்ச நட்சத்திரம் முதல் நேற்று முளைத்த ஹீரோக்களின் படங்கள் வரை வசூல் நிலவரம் என்பது எப்போதும் அள்ளித் தெளிக்கப்படும் என்பது மட்டும் உண்மை.