இனி 'மத்திய அரசு' இல்லை.. எல்லா புத்தகங்களிலும் 'ஒன்றிய அரசு' தான்.. அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்
சென்னை: தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறப்பு குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ள உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, உயர் கல்வி பாடப்புத்தகங்களில், 'மத்திய அரசு' என்பது மாற்றப்பட்டு, 'ஒன்றிய அரசு' என்ற வார்த்தை இடம்பெறும் என்று தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் எனக் கடந்த சில நாட்களுக்கு முன் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார்.
இதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
ஜெ. பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் - அமைச்சர் பொன்முடி
கல்லூரி கட்டணம்
அப்போது பேசிய அவர், "நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.எட் ஆசிரியர் படிப்பிற்குத் தனியார் கல்லூரிகள் ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது. விதிகளை மீறி அதிக தொகையைக் கட்டணமாக வசூலித்தால் தனியார் கல்லூரிகள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். பொறியியல் மாணவர்கள் சேர்க்கையில் இந்த ஆண்டு முதல்வர் உத்தரவின்படி கல்விக் கட்டணத்தில் 75% மட்டுமே வசூலிக்க வேண்டும்.
பணிநியமன முறைகேடுகள்
கடந்த ஆட்சியில் உயர் கல்வித்துறையில் பல்வேறு பணி நியமன முறைகேடுகள் நடந்துள்ளன. திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவின் தங்கை முறைகேடாகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை, தேவைக்கு அதிகமாகப் பேராசிரியர்களும், ஊழியர்களும் இருந்ததால் பல்வேறு மாவட்டங்களுக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
ஜெயலலிதா பல்கலைக்கழகம்
ஜெயலலிதா பல்கலைக்கழகம் மாணவர் நலன் கருதித் தொடங்கப்பட்டது இல்லை. ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு அதிமுக அரசு துணைவேந்தர், அவரின் உதவியாளர், டிரைவர், வாட்ச்மேன் என நான்கு பேரை நியமனம் செய்திருந்தது. எனவே, 100 ஆண்டுகள் பழமையான அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதில் தவறு இல்லை, பெருமைதான்.
ஒன்றிய அரசு
மேலும், உயர் கல்வி பாடப்புத்தகங்களில், 'மத்திய அரசு' என்பது மாற்றப்பட்டு, 'ஒன்றிய அரசு' என்ற வார்த்தை இடம்பெறும். கல்லூரிகள் திறப்பது குறித்து, இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு அனைத்து துறை வல்லுநர்களுடனும் ஆலோசிக்கப்படும். அதன் பிறகு முதல்வரைக் கலந்தாலோசித்து கல்லூரிகள் திறப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.