எங்களுக்கு நீங்க பாடம் எடுக்கலாமா? கல்வியில் பின்தங்கிய பாஜக ஆளும் மாநிலங்கள்.. விளாசிய பிடிஆர்!
சென்னை: கிண்டர் கார்டன் அளவில் கூட சாதனை செய்யாதவர்கள் கல்லூரி அளவில் சாதித்த நமக்கு பாடம் எடுக்கிறார்கள் என்று தேசிய கல்விக்கொள்கை குறித்து அமைச்சர் பிடிஆர் விமர்சனம் செய்துள்ளார்.
தேசிய கல்விக்கொள்கை மத்திய அரசு மூலம் கடந்த 2020ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு பாஜக ஆளும் மாநிலங்களில் ஏற்கனவே இந்த கல்விக்கொள்கை அமலுக்கு வந்துவிட்டது.
ஆனால் தமிழ்நாட்டில் திமுக அரசு, இந்த திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. பள்ளிக்கல்வி மாநில பட்டியலில் இருக்கிறது. அதனால் திட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த மாட்டோம் என்று கூறிவிட்டது.
கிரைண்டர் மீதான ஜிஎஸ்டி வரி 18%-ஆக உயர்வு.. குறைக்க நடவடிக்கை.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உறுதி
குலக்கல்வி
அதோடு இந்த திட்டம் குலக்கல்வி திட்டத்தை ஆதரிக்கிறது. மாணவர்களை மேலும் பின்னோக்கி செல்ல இது வழிவகுக்கும். இந்தி மொழியை திணிக்கிறது. மீண்டும் முழுமொழி கொள்கையை கொண்டு வர இந்த திட்டம் காரணமாக இருக்கும். அதனால் தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சமீபத்தில் தேசிய கல்விக்கொள்கை சார்பாக விவாதிக்க குஜராத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கூட தமிழ்நாடு அரசு கலந்து கொள்ளவில்லை.
தனியாக புதிய கல்விக்கொள்கை
அதோடு தமிழ்நாட்டிற்கு என்று தனியாக புதிய கல்விக்கொள்கையை அமைக்க குழு கொண்டு வரப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் இதற்காக குழு உருவாக்கப்பட்டுள்ளது. 13 பேர் கொண்ட மாநில கல்வி கொள்கை குழு அமைக்கப்பட்டு இவர்கள் அடுத்த வருடத்திற்குள் அறிக்கை அளிப்பார்கள். அதை வைத்து அடுத்த ஆண்டு கல்வி திட்டம் மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுகள் தற்போது நடந்து வருகின்றன.
உயர் கல்வி மாணவர் சேர்ப்பு சராசரி
மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக்கொள்கையில் பல்வேறு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. அதன்படி தேசிய அளவில் உயர் கல்வி மாணவர் சேர்ப்பு சராசரி 50 சதவிகிதத்தை தாண்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை GER என்று அழைப்பார்கள். அதாவது Gross enrolment ratio. பள்ளி படிப்பு முடித்து கல்லூரி சேரும் நபர்களின் எண்ணிக்கை ஆகும் இது. இதன் தேசிய சராசரி 27.1%. ஆனால் தமிழ்நாட்டின் சராசரி 51.4% ஆகும்.
தமிழ்நாடு முன்னேற்றம்
தமிழ்நாடு இந்த சராசரியை 15 வருடங்களுக்கு முன்பே அடைந்துவிட்டது. இதைத்தான் இப்போது தேசிய கல்விக்கொள்கை இலக்காக நிர்ணயித்து உள்ளது. இதைத்தான் கல்வியாளர்கள் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.தமிழ்நாடு கல்வியில் உலக நாடுகளை பின்னுக்கு தள்ளி முன்னணியில் உள்ளது. ஜெர்மனி, அமெரிக்காவில் கூட இவ்வளவு மாணவர் சேர்க்கை இல்லை. அப்படி இருக்கும் போது நாங்கள் ஏன் தேசிய கல்விக்கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று கல்வியாளர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
Recommended Video
பெண்கள் உயர் கல்வி
இந்த நிலையில்தான் நெட்டிசன் ஒருவர் தமிழ்நாட்டில் பெண்கள் உயர் கல்வி சேரும் சதவிகிதமும் மிக அதிகமாக இருப்பதாக புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளார். அதாவது மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் GER சதவிகிதம் தமிழ்நாட்டில் 80 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. குஜராத்தில் இதன் சதவிகிதம் வெறும் 42தான். பெரும்பாலும் பாஜக ஆளும் மாநிலங்களில் இது மிகவும் குறைவாகவே இருக்கிறது. பின்னர் நாம் ஏன் அவர்களை பின்தொடர வேண்டும் என்று அந்த நெட்டிசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
இந்த ட்விட்டை ஷேர் செய்த தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தேசிய கல்விக்கொள்கையை விமர்சனம் செய்துள்ளார்.. அதில்.. இந்த நாடு இப்போது தலைகீழான ஒரு உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. கிண்டர் கார்டன் லெவல் கல்வி முன்னேற்றத்தை வைத்துக்கொண்டு சிலர் கல்லூரி அளவில் சாதனை செய்தவர்களுக்கு பாடம் எடுக்கிறார்கள். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மாநில பட்டியலில் வரும் விஷயங்களில் "தேசிய XYZ கொள்கை" என்றெல்லாம் திட்டங்களை கொண்டு வந்து எங்களுக்கு பாடம் எடுக்கிறார்கள். எல்லோரையும் ஒரேயடியாக கீழே கொண்டு வர நோக்கம் போல! என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனம் செய்துள்ளார்.