ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள்... ராஜேந்திரபாலாஜி உறுதி
சென்னை: ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சடித்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
பாஜக சமூக வலைதளப்பிரிவு நிர்வாகி நிர்மல் குமார் விடுத்த கோரிக்கையை ஏற்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இந்த அறிவிப்பை ட்வீட்டர் மூலம் வெளியிட்டுள்ளார்.
திருவள்ளுவரை மையமாக வைத்து கடந்த சில நாட்களாக கருத்து மோதல் நடைபெற்று வரும் நிலையில் அமைச்சரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
திருக்குறள்
ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சடித்து விநியோகம் செய்ய வேண்டும் என பாஜக சமூக வலைதளப் பிரிவி நர்வாகி நிர்மல் குமார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்திருந்தார். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, இது தொடர்பாக முதலமைச்சருடன் கலந்துபேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
திமுக மீது சாடல்
கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக திருவள்ளுவரின் உண்மை வரலாற்றை மறைத்து தமிழர்களுக்கு திமுக பெரும் துரோகம் இழைத்துள்ளதாகவும், திருக்குறளையும், தமிழ் மொழியையும் திமுகவினர் தங்கள் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தினர் எனவும் பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கோரிக்கை
திருக்குறளை மக்கள் மத்தியில் எளிமையாக கொண்டு சேர்க்க பாஜக பல முயற்சிகளை எடுத்து வருவதாகவும், அதன் படி ஆவின் பால் பைகளில் திருக்குறளை அச்சடித்து விநியோகம் செய்வதன் மூலம் ஒவ்வொரு இல்லத்திற்கும் திருக்குறள் சென்றடையும் என்றும் நிர்மல் குமார் குறிப்பிட்டுள்ளார்.
நடவடிக்கை
பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் விடுத்த கோரிக்கையை ஏற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மிக விரைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இது குறித்து பேசி அவருடைய ஒப்புதலை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ட்வீட்டரில் உறுதியளித்துள்ளார்.