திமுக இனி கதம் கதம்தான்.. ஸ்டாலின் போக்கு யாருக்கும் பிடிக்கலை.. வெளுத்து வாங்கிய ராஜேந்திர பாலாஜி
திமுக தலைவரை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சரமாரி விமர்சித்துள்ளார்
சென்னை: "திமுக இனி கதம் கதம்தான்.... இனி எந்த தேர்தலிலும் இந்த திமுகவிற்கு வேலையே இருக்காது... திமுகவில் உள்ள 2-ம் கட்ட தலைவர்கள் எல்லாம் ஸ்டாலினின் போக்கு பிடிக்காமல், மனம் வெதும்பி போய் இருக்கிறார்கள்" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு அதிரடி பேட்டியை தந்துள்ளார்.
சர்ச்சைகள் மட்டுமல்லாமல் அதிரடிகளுக்கு பெயர் போனவர் ராஜேந்திர பாலாஜி.. அமைச்சர்கள் செல்லூர் ராஜு, அல்லது திண்டுக்கல் சீனிவாசன் போலதான் இவரது பேச்சும் வெகுளித்தனமாக ஆரம்பத்தில் பார்க்கப்பட்டது..
ஆனால் நாள் ஆக, ஆக, அது வெகுளித்தனம் இல்லை, திமுகவுக்கு வைக்கப்படும் ஆப்பு என்றும் பாஜகவுக்கு காட்டப்படும் முழு விசுவாசம் என்றும் மக்களுக்கு மெல்ல புரிய ஆரம்பித்தது.
மகிழ்ச்சி தகவல்: கொரோனாவை குணப்படுத்தும் 'கோவிஃபார்' மருந்து இந்தியாவில் அறிமுகம்! ஒரு டோஸ் ரூ.6000
எம்பி தேர்தல்
ஒரு கட்டத்தில் இது எல்லையும் மீறியது.. எங்கு போனாலும் திமுகவை வறுத்தெடுத்து பேட்டி தந்தார்... இந்துக் கடவுள்களை திமுக அவதூறாக பேசி வருகிறது என்றார்.. எம்பி தேர்தலின்போது, "நஞ்சை விதைத்து திமுக வெற்றி" என்றார். அடுத்த கட்டமாக மதரீதியாக மற்றொரு விமர்சனத்தை முன்வைக்கவும் கொந்தளித்த திமுக, ஆளுநரிடமே சென்று புகார் தந்தது.
ஆளுநரிடம் புகார்
"அரசியலமைப்பு சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்தவர் கண்ணுக்கு முன்னால் மதச் சார்பின்மைக்கு எதிராகப் பேசுகிறார்...மக்களை மதரீதியாகத் துண்டாடத் துணிகிறார். ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்வதோடு, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று திமுகவினர் கேட்டுக் கொண்டனர். ராஜேந்திர பாலாஜியின் ஒவ்வொரு நாள் பேச்சும், அதிமுக அரசுக்கு தர்மசங்கடத்தையே தந்தநிலையில்தான் அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
ஸ்டாலின்
ஆனால் இப்போது என்ன ஆனது என்று தெரியவில்லை.. திரும்பவும் திமுகவை தாறுமாறாக விமர்சிக்க தொடங்கிவிட்டார் அமைச்சர். சிவகாசி அருகே செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், "ஒன்றிணைவோம் வா என்று கூறி, மு.க. ஸ்டாலின் மட்டுமே நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்... ஸ்டாலின் நடவடிக்கையை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை... ரோடு போடாத சாலைப் பணியில் டெண்டர் முறைகேடு என்றுகூறி திமுகவினர் வழக்கு தொடர்வார்கள்.
கொரோனா
பொய் என்று தெரிந்தவுடன் அவர்களே வழக்கை வாபஸ் பெறுவார்கள்... ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக என்பதை ஸ்டாலின் மறந்துவிடக்கூடாது. கலைஞர் இருக்கும்வரை திமுக சுயமரியாதையுடன் இருந்தது... ஆனால் இப்போது பிரசாந்த் கிஷோர் கூறும் ஆலோசனையைக் கேட்டு, கட்சியை நடத்த வேண்டிய அவல நிலையில் திமுக உள்ளது.
உதவி
கொரோனா நிவாரண உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு அதிமுக லாரி லாரியாக, வாரி வாரி வழங்கியதை நாட்டு மக்கள் அறிந்திருப்பார்கள்... ஆனால், திமுக பெயரளவில் நிவாரணத்தை கொடுத்துவிட்டு, பெரிய அளவில் விளம்பரத்தை தேடியது. இன்றைக்கு 9 துறைகளில் மத்திய அரசின் தேசிய விருதை எடப்பாடியார் அரசு பெற்றுள்ளது. திமுக இனி கதம் கதம்தான்.
எடப்பாடியார்
திமுக என்ற கட்சியே வரும் தேர்தலோடு முடியப்போகிறது... இனி எந்தத் தேர்தலிலும் திமுகவிற்கு வேலையே இருக்காது. திமுகவில் உள்ள 2-ம் கட்ட தலைவர்கள் எல்லாம் ஸ்டாலினின் போக்கு கண்டு மனம் வெதும்பி போய் இருக்கிறார்கள்.. மீண்டும் அதிமுகதான் ஆட்சிக்கு வரும். எடப்பாடியார் தொடர்ந்து முதலமைச்சாராக பணியாற்றுவார்" என்றார்.
என்ன காரணம்?
இவ்வளவு நாள் அமைதியாக இருந்த அமைச்சர் திடீரென ஏன் திமுக மீது பாய்ந்துள்ளார்? ஏற்கனவே இவரை கவனத்துடனும், நிதானத்துடனும் பேச சொல்லி முதல்வர் அறிவுறுத்தி இருந்த நிலையில், இன்றைய சூழலில் அமைச்சர் ஏன் கடுமையாக விமர்சிக்கிறார்? ஒருவேளை எடப்பாடியாருக்கு தெரிந்தே இப்படி பேசுகிறாரோ என்று அதிமுக வட்டாரமே கிசுகிசுக்கிறது.. இதற்கு திமுக தரப்பு என்ன பதிலடி தரப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!