மீண்டும் கட்சிப் பதவி- அதிமுக விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமனம்
சென்னை: அதிமுகவின் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளராகவும் அமைச்சராகவும் பதவி வகித்த ராஜேந்திர பாலாஜியின் ஒவ்வொரு பேட்டியும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடிதான் எங்களுக்கு டாடி என்கிற ராஜேந்திர பாலாஜியின் வசனம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை விமர்சிக்கும் வகையில் ராஜேந்திர பாலாஜி கருத்துகளை வெளியிட்டு வந்தார். இது அதிமுக தலைமைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதனால் ராஜேந்திர பாலாஜி வசம் இருந்த அதிமுக விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் சிறிது காலம் அமைதியாக இருந்தார் ராஜேந்திர பாலாஜி. பின்னர் மீண்டும் அதிமுக தலைமையை சமாதானம் செய்து ஊடகங்களில் பேட்டி கொடுக்க தொடங்கினார்.
இந்நிலையில் அதிமுகவின் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட கூட்டறிக்கையில், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை, மாவட்ட கழகப் பணிகளைக் கவனிப்பதற்கு பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமிக்கப்படுகிறார் என அறிவித்துள்ளனர்.
லடாக் மக்களா.. மோடியா.. யாரோ ஒருவர் பொய் சொல்றாங்க.. வீடியோவை காட்டி ராகுல் காந்தி கேள்வி