ஏரிக்கரையில.. குடையுடன் முதல்வர் நிற்பது தெரிந்துதான் ஸ்டாலின் அப்படி செய்தார்.. ராஜேந்திரபாலாஜி நச்
முக ஸ்டாலினை மீண்டும் விமர்சித்து பேசியுள்ளார் ராஜேந்திர பாலாஜி
சென்னை: "மழை வருது, புயல் வருது, வெள்ளம் வருதுன்னு தெரியுது இல்லை? அதுக்கு தேவையான நடவடிக்கைகளை ஸ்டாலின் முதல்லயே எடுக்கணும் இல்லை? ஆனால், முதல்வர் செம்பரம்பாக்கம் ஏரியில், அணைக்கட்டில் கொட்டும் மழையில் நனைஞ்சிக்கிட்டு நிக்கிறார் என்று தெரிந்ததும், ஓடோடி சென்று பார்வையிடுவது சேவை கிடையாது" என்று திமுக தலைவரை மறுபடியும் சீண்டி வம்பிழுத்து பேட்டி தந்துள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, புயல் வெள்ள பாதிப்பில் தமிழக அரசு செய்த நடவடிக்கைகள் குறித்து சிலாகித்து பேசினார்.. ஆனால், அப்போதும் மறக்காமல் முக ஸ்டாலினை விமர்சித்துவிட்டுதான் நகர்ந்தார்.
அப்போது அவர் பேசியதாவது: "ஆவின் பால் புயல் பாதித்த பகுதிக்கு தங்கு தடையின்றி கிடைத்துள்ளது... ஆவின் பாலை வெள்ளம் பாதித்த பகுதிகளில் எல்லாருக்கும் விநியோகித்து வருகிறோம்.
அதனால் புயலைப் பொறுத்தமட்டில் வரும் முன் காப்போம் என்ற முறையில் எடப்பாடியார் எடுத்திருக்கும் நடவடிக்கை எல்லாரும் பாராட்டுகிறார்கள். தானே குடையை பிடித்து, சொட்ட சொட்ட நனைந்து கொண்டு, செம்பரம்பாக்கம் ஏரியை பார்த்து மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு ஏற்பாடு செய்து தரும் ஒரு முதல்வராக எடப்பாடியார் இருக்கிறார்..
ஆனால், ஸ்டாலினும் பார்வையிட வந்தார்? அவர் எப்படி வந்தார்? போர்க்கவசம்போல, பாதுகாப்பு டிரஸ்ஸூடன் வந்தார்.. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட யார் வந்தாலும் நாங்க பாராட்டதான் செய்வோம்.. ஆனால் எடப்பாடியார் களத்துக்கு போய்ட்டாரு என்று தெரிந்தவுடன், பேரிடர் நிவாரண குழுவுடன் செயல்படுகிறார் என்று தெரிந்தவுடன், பார்வையிட ஸ்டாலின் வர்றார்.. பிறரை பார்த்து வருவது சேவை இல்லை.. தானா வருவது தான் சேவை..
அரசாளும் வரம் வேண்டுமா? கார்த்திகை தீப திருநாளில் விரதமிருந்து விளக்கேற்றுங்கள்
மழை வருது, புயல் வருது, வெள்ளம் வருதுன்னு தெரியுது இல்லை? அதுக்கு தேவையான நடவடிக்கைகளை முதல்லயே எடுக்கணும்.. முதல்வர் செம்பரம்பாக்கம் ஏரியில், அணைக்கட்டில் கொட்டும் மழையில் நனைஞ்சிக்கிட்டு நிக்கிறார் என்று தெரிந்ததும், ஓடோடி சென்று பார்வையிடுவது சேவை கிடையாது.
தேர்தலுக்கு இன்னைக்கு அவருக்கு தேவை இருக்கு.. அதனால போயிருக்கார். இந்த ஆட்சியின் சிறப்பை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. யார் உண்மையாக சேவை செய்கிறார்கள்? யார் நடிக்கிறார்கள் என்பதை பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. அவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான பதிலடியை மக்கள் தருவார்கள்" என்றார்.