இதுக்குத்தான் "அது" வேணும்ங்கிறது... ராஜேந்திர பாலாஜிக்கு.. கரெக்டாக செக் வைத்த எடப்பாடியார்!
விருதுநகர் மாவட்ட அதிமுகவில் உட்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது
சென்னை: இதுக்குதான்.. எது பேசினாலும் நாவடக்கம் அவசியம் என்பதுதான் பிரதான வாக்கியமாக அரசியலில் உள்ளது.. அந்த வகையில், ராஜேந்திர பாலாஜிக்கு எடப்பாடியார் தரப்பு மறுபடியும் ஒரு செக் வைத்துள்ளது!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அதிமுகவுக்குள் இரட்டை தலைமை விவகாரம் வெடித்தது.. அதேபோல முதல்வர் வேட்பாளர் யார் என்ற பிரச்சனையும் வெடித்தது..
இதனால் அமைச்சர்கள் தரப்பினர் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பினரிடையே ஓடி ஓடி சமாதானம் செய்து, இறுதியில் ஒரு சுமூக முடிவுக்கு வந்தார்கள் என்றாலும் இதற்கெல்லாம் மூல காரணம் ராஜேந்திர பாலாஜிதான் என்று கிசுகிசுக்கப்பட்டது.
காரணம், கொரோனா நலத்திட்ட உதவிகளை தொகுதிக்குள் வழங்கும் விழாக்களிலும் சரி, பிற விழாக்களிலும் சரி, அடுத்த முதல்வர் எடப்பாடியார்தான் என்று சூளுரைத்து கொண்டே இருந்தார்.. இதுதான் ஓபிஎஸ் தரப்புக்கு எரிச்சலை கிளப்பியது.. அவரை ஏன் முதல்வர் எதுவுமே சொல்லாமலும், கண்டிக்காமலும் இருக்கிறார் என்று ஓபிஎஸ் தரப்பில் கேள்வி எழுப்பவே செய்தனர்.
இதனிடையே, கட்சி கட்டுப்பாட்டையும் மீறி செயல்படுவதாக கூறியும், உட்கட்சி பூசல் சிலவற்றினாலும், ராஜேந்திரபாலாஜியின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.. பிறகு மீண்டும் அவருக்கு அதே பொறுப்பு தரப்பட்டாலும், இதை ஓபிஎஸ் தரப்பினர் வெகுவாக ரசிக்கவில்லை.. இந்த சமயத்தில்தான், ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான உட்கட்சி பிரச்சனை வளர்ந்து வருவதும், அது வரும் தேர்தலில் சிக்கலை கண்டிப்பாக ஏற்படுத்தும் என்றும் உளவுத்துறை மூலம் முதல்வருக்கு ஒரு அறிக்கை போனதாம்.
இதை வைத்துதான், விருதுநகர் மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட்டு, அதில் ஒரு பகுதிக்கு ராஜேந்திர பாலாஜியும், மற்றொரு பகுதிக்கு ரவிச்சந்திரனும் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்... இது ராஜேந்திர பாலாஜிக்கே ஷாக் தரும் அறிவிப்பாகும்.. மொத்த மாவட்டமும் தன்னுடைய பிடிக்குள் வரும் என்று கணக்கு போட்டு கொண்டிருந்தவருக்கு, அதில் பாதிதான் தரப்பட்டுள்ளது.
மாவட்ட அதிகாரத்தின் எல்லை சுருங்கி விட்டது அவரது ஆதரவாளர்களையும் அப்செட்டில் ஆழ்த்தி வருகிறது. இப்பவே மாவட்ட உரிமையில் கை வைத்தால், நாளைக்கு சீட் தருவதிலும் பிரச்சனை வருமோ என்ற கவலையும் அவர்களுக்கு ஏற்பட்டு வருகிறதா!