அது வேட்டி.. இது துண்டு.. நாங்க பொங்குனாலும்.. அப்படியேதான் இருப்போம்.. ராஜேந்திர பாலாஜி பலே!
மும்மொழி கொள்கை குறித்து ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை: மும்மொழி கொள்கை விவகாரத்தில் கூட்டணியை கூட விட்டுத் தரலாம்... ஆனால் கொள்கையை விட்டுத்தர முடியாது.. கூட்டணி என்பது துண்டு போன்றது.. கொள்கை என்பது வேட்டி போன்றது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கை மும்மொழி கொள்கையை வலியுறுத்துவதன் காரணமாக, தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.. சோஷியல் மீடியாவில் விவாதங்களும் எழுந்து வருகின்றன.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மும்மொழி கொள்கை முறையே நாடு முழுவதும் தொடரும் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.. மேலும், 3வது மொழியை அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுத்து கொள்ளலாம் என்றும் கூறினார்.
இருமொழி கொள்கை
இதையடுத்து தமிழகத்தில் மேலும் சலசலப்பு அதிகமானது.. எனவே தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட கூறினார். ஏற்கனவே கூட்டணியில் விரிசல் உள்ள நிலையில், இந்த விஷயத்தில் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே மேலும் கருத்து வேறுபாடுகள் அதிகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது... விரைவில் தேர்தலும் வரவுள்ளதால் தமிழக மக்களின் மனநிலைமைக்கு ஏற்றபடியே முடிவுகளை எடுத்து வருகிறார் முதல்வர்.
அமைச்சர்
இப்படிப்பட்ட சூழலில்தான் மும்மொழி கொள்கை குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். "மும்மொழி கொள்கையால் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே முரண்பாடா? என்பது உட்பட வேளாண் மசோதா தாக்கல் குறித்த பல கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர்.
மாநில அரசு
அதற்கு அமைச்சர், "முதல்வர் எதை செய்தாலும் ஸ்டாலின் எதிர்க்கிறார்.. வேளாண் திருத்த மசோதாவில் தவறு இருந்தால் கண்டிப்பாக முதல்வர் எதிர்ப்பார்.. எதை செய்தாலும், மத்திய, மாநில அரசுகளை குறை சொல்லி பிழைப்பு நடத்தும் ஸ்டாலின் கனவு பலிக்காது.
பொங்கும் கடல்
கூட்டணியை கூட விட்டு தரலாம்.. ஆனால் கொள்கையை விட்டுத்தர முடியாது.. கூட்டணி என்பது துண்டு போன்றது.. கொள்கை என்பது வேட்டி போன்றது.. அதிமுக பொங்கும் கடல் போன்றது.. கொந்தளிப்பு வந்தாலும் அப்படியே தான் இருக்கும்.. அதனை எக்காலமும் அழிக்க முடியாது.. நாங்கள் செய்த மக்கள் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி தேர்தலில் வெற்றி பெறுவோம்" என்றும் அமைச்சர் கூறினார்.
கூட்டணி
பொதுவாக ராஜேந்திர பாலாஜி பேசினாலே, இவர் பாஜக அமைச்சரா? அதிமுக அமைச்சரா? என்ற சந்தேகம் எழுவதாக சொல்லப்படுவதுண்டு.. அந்த அளவுக்கு பாஜகவுக்கு ஆதரவாகவே பேசி வருபவர்.. தற்போது, கூட்டணியைகூட விட்டுத்தரலாம் என்று சொன்னதில் இருந்தே, இருமொழி கொள்கைதான் தமிழகத்தின் நிலைப்பாடு என்பது உறுதியாகி உள்ளதுடன், பாஜக - அதிமுகவுடன் கூட்டணி வைப்பது சற்று சிக்கல்தான் என்பது போலவும் தெரிகிறது!