எடப்பாடி பழனிச்சாமி ஒரு ஈயை கூட அடிக்கமாட்டார்ங்க- ராஜேந்திர பாலாஜியின் ஆவேச விளக்கம்
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு ஈயை கூட அடிக்கமாட்டார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
கொடநாடு எஸ்டேட்டில் 5 பேர் மர்மமான முறையில் இறக்கவில்லை. அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அங்கிருந்த ரூ. 2000 கோடி பணத்தை கொள்ளையடிக்க எடப்பாடி பழனிச்சாமி ஆட்களை அனுப்பி வைத்ததாக தெஹல்கா பத்திரிகையாளர் மேத்யூஸ் பரபரப்பு குற்றச்சாட்டை நேற்று முன் தினம் முன்வைத்தார்.
இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறுத்துள்ளார். மேலும் மேத்யூஸை கைது செய்ய டெல்லிக்கு தனிப்படை விரைந்துள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், மக்களுக்கு பிடித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே பலர் செயல்பட்டு வருகின்றனர்.
அவரை அகற்றவோ, எதிர்க்கவோ எவருக்கும் திராணி கிடையாது. திராணி, தெம்பு இல்லாத சிலர் இந்த மாதிரி சுற்றுவலையை பின்னிக் கொண்டு மறைமுகமான குற்றசாட்டை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
எடப்பாடி ஈயை கூட அடிக்கமாட்டார் அவரா போய் கொலை செய்ய தூண்டிவிடுகிறார். இது எல்லாம் எதிர்கட்சியினுடைய சதிதான் என அமைச்சர் கூறினார்.