நெருப்பிலும், ஏன்! கடலிலும் கூட இறங்குவார் எங்கள் முதல்வர்.. அமைச்சரின் அதிரடி பேச்சால் பரபரப்பு!
சென்னை: கொடநாடு விவகாரத்தில் தன் மீது குற்றம் இல்லை என்பதை நிரூபிக்க முதல்வர் பழனிச்சாமி கடலிலும் நெருப்பிலும் கூட இறங்குவார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பகீர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் பணியாளர்கள் மர்ம மரணம் தொடர்பாக தெஹல்கா ஊடகத்தின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
முதல்வர் மறுப்பு
அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் கொலை, கொள்ளைக்கும் தொடர்பிருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் தமிழக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் தனக்கும் அந்த கொடநாடு மர்மக் கொலைக்கும் சம்பந்தம் இல்லை.
ஆளுநரிடம் மனு
அரசியலில் நேரடியாக மோதமுடியாமல் குறுக்கு வழியை தேர்வு செய்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது எதிர்க்கட்சியினர் இத்தகைய குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதாக முதல்வர் தெரிவித்தார். இந்த வீடியோ தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் திமுக தலைவர் ஸ்டாலின் புகார் அளித்தார்.
கடலிலும் நெருப்பிலும்
இதுகுறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில் கொடநாடு விவகாரத்தில் பின்புலத்தில் திமுக இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் தன் மீது குற்றம் இல்லை என்பதை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடலிலும் நெருப்பிலும் கூட இறங்குவார்.
ஊழல் இல்லை
அறையில் யாகம் நடத்தியதை யார் பார்த்தார்கள்? அவர் சாமிதான் கும்பிட்டார். மோடி ஆட்சியில் நிறை குறைகள் இருந்தாலும் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.