"அய்யோ போச்சே, வடை போச்சே" பதட்டப்படாதீங்க ஸ்டாலின்.. ஒரே சிரிப்பா வருது.. ராஜேந்திரபாலாஜி செம கலாய்
முக ஸ்டாலினை விமர்சித்து ராஜேந்திர பாலாஜி அறிக்கை வெளியிட்டுள்ளார்
சென்னை: "அய்யோ வடை போச்சே...! அய்யோ வடை போச்சே என்று ஸ்டாலின் வருத்தப்பட வேண்டாம் என்றும், முதல்வரின் இலவச அறிவிப்பால் ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிப்பதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டையில் கொரோனா தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, "கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழக அரசின் செலவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும்" என்று அறிவித்தார்.
முதல்வர் இப்படி அறிவித்த உடனேயே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "மருந்தை இலவசமாக கொடுக்க வேண்டியது மக்கள் நல அரசின் கடமை... இலவச கொரோனா தடுப்பூசியை மக்களுக்குத் தான் காட்டும் சலுகை என நினைக்கிறாரா முதல்வர்.. நிற்கதியாய் நிற்கும் மக்களுக்கு 5 ஆயிரம் நிதி உதவி செய்ய மனமில்லாதவர், தன்னை தாராளப் பிரபுவாக காட்டிக் கொள்வதை காண சகிக்கவில்லை!' என பதிவிட்டிருந்தார்.
முதல்வரின் தடுப்பூசி அறிவிப்பும், திமுக தலைவரின் விமர்சனமும் என ஒரே நாளில் சோஷியல் மீடியாவில் பேசுபொருளாக உருவெடுத்தன.. இதற்கு காரணம், நேற்று பீகார் மாநில பாஜகவும், எடப்பாடியாரின் அறிவிப்பையே, தங்களுடைய தேர்தல் அறிக்கையிலும் வாக்குறுதியாக தெரிவித்திருந்தது.. அந்த வாக்குறுதி சர்ச்சையையும் கிளப்பியது. எனவே, முதல்வரின் அறிவிப்பு குறித்து ஸ்டாலின் பேசியது தவறு இல்லை என்றும் ஒருசாரார் சொல்லி வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் ஏன் அப்படி ஒரு வார்த்தையை சொன்னார்.. ஜெயக்குமார் சொல்வது போல வெறும் "நாடகமா"?
இந்நிலையில், முக ஸ்டாலினுக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிலடி தந்துள்ளார்.. மேலும் இது தொடர்பாக ஒரு அறிக்கையே விடுத்துள்ளார்.. அதில் அமைச்சர் சொல்லி உள்ளதாவது:
அதில், "கொடுக்கின்ற மனம் வள்ளலின் வாரிசுகளுக்குதான் வரும்...!
கெடுக்கின்ற குணம் கெடு மதியாளர்களின் சூழ்ச்சியில்தான் தெரியும்...!
கொரோனா தடுப்பூசி இலவசம் என்ற எடப்பாடியாரின் அறிவிப்பு...!
மக்கள் மனம் போற்றும் அறிவிப்பு...!
இதை கண்டு MK ஸ்டாலின் பதட்டப்பட வேண்டாம்...!
அய்யோ வடை போச்சே...!
அய்யோ வடை போச்சே...!
என்று வருத்தப்பட வேண்டாம்...!
வரலாற்றை திரும்பி பாருங்கள்...!
மக்கள் பற்றிய நீலிகண்ணீர் வடிக்கும் உங்கள் செய்தி மக்களால் கேலியாக பார்க்கப்படுகிறது...!
உங்கள் அரசியல் நடத்தை நகைப்பிற்குரியது...!
எடுபடாது உங்கள் திட்டம் 2021-ல்,
மீண்டும் அம்மாவின் ஆட்சியே மலரும்...! இது வரலாற்று சரித்திரம்...!" என்று குறிப்பிட்டுள்ளார்.
கிட்டத்தட்ட பாட்டாவே பாடிவிட்ட அமைச்சரின் இந்த அறிக்கைதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.. அத்துடன், "நீலிகண்ணீர் வடிப்பது", "அரசியல் நடத்தை நகைப்பிற்குரியது" போன்ற வார்த்தைகள் உடன்பிறப்புகளை செம கடுப்பாக்கி வருகின்றன.