நிற்கச் சொல்லுங்க திமுகவை... ஊரில் யார் பெரிய மனுஷன் என பார்ப்போம் - ராஜேந்திரபாலாஜி
சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் மூலம் ஊரில் யார் பெரிய மனுஷன் என்பது தெரிந்துவிடும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும், 2021-ம் ஆண்டும் அதிமுக ஆட்சியை மீண்டும் தொடரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேர்தலை கண்டும் அஞ்சாத கட்சி அதிமுக என்றும், திமுகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்ட காரணத்தால் தான், அவர்கள் உச்சநீதிமன்றத்திற்கு ஓடியதாகவும் விமர்சித்துள்ளார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.
புதுவையிலும் வெடித்தது போராட்டம்.. மாணவர்கள் ஸ்டிரைக்... ஜனாதிபதி வரும் நேரத்தில் டென்ஷன்!
திமுகவுக்கு பயம்
உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அஞ்சுகிறது என ஊர் ஊராக பேசிய திமுக , இப்போது தேர்தலுக்கு தேதி குறித்த பின்னர் பின்னால் ஓடுவதாக தெரிவித்துள்ளார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. நாங்களா ஓட்டுபோட போகிறோம், மக்கள் தான் ஓட்டுப்போடப்போகிறார்கள் அதற்கு ஏன் திமுக அஞ்சுகிறது எனத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகள் அச்சம்
அதிமுகவுக்கு வலிமையான தலைமை இல்லை என நினைத்த எதிர்க்கட்சிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாகத் திறன் அச்சத்தை அளித்துள்ளதாக கூறினார். மேலும், வரும் 2021-ம் ஆண்டும் அதிமுக தான் தமிழகத்தை ஆட்சி செய்யும் எனத் தெரிவித்தார். செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதனைக் குறிப்பிட்டார்.
திமுக-அமமுக
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டாலும், மறைமுக கூட்டணி அமைத்து செயல்படுவதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். வெளியே தெரியாத வகையில் அவர்கள் பேசி வைத்துக்கொண்டு செயல்படுவதாக கூறினார்.
மோடி நண்பன்
பாஜகவுடனான கூட்டணி தொடரும் என்றும், பிரதமர் மோடியையை நண்பராகவும், சகோதரராகவும் தாங்கள் பார்ப்பதாக தெரிவித்தார் ராஜேந்திரபாலாஜி. அதிமுகவுக்கு கெடுதல் செய்யாத யாராக இருந்தாலும் அவர்கள் தங்களுக்கு நண்பனே எனக் கூறினார் அவர்.