ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது... இது ஸ்டாலினுக்கு தெரியும் -ராஜேந்திரபாலாஜி
சென்னை: அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது என்பது எதிர்க்கட்சித் தலைவரான மு.கஸ்டாலினுக்கு நன்றாக தெரியும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டபோது பேசிய அவர் இதனைக் கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை அனைத்து சமுதாய மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அரசுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் நடைபெற்ற நில அபகரிப்பு உள்ளிட்ட விரும்பத்தகாத செயல்களை எண்ணி இன்றும் மக்கள் மனதில் கோபம் உள்ளதாக தெரிவித்தார். திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், ஆனால் இப்போது அப்படியில்லை மக்கள் நிம்மதியோடு வாழ்ந்து வருவதாகவும் பேசினார். அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் எனக் கூறினார்.
அதிமுக ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது என்பது ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும், இருந்தும் அவர் ஆட்சியை கலைத்துவிடலாம் என்ற அவநம்பிக்கையில் முயற்சி செய்து வருவதாக ராஜேந்திரபாலாஜி விமர்சித்தார். மேலும், திமுகவை ஒருகாலமும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அதில் சந்தேகமே வேண்டாம் எனத் தெரிவித்தார்.
நாங்குநேரியில் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றிபெறுவது உறுதி என்றும், அந்த தொகுதிக்காக ஜெயலலிதா பல திட்டங்களை செயல்படுத்தியதாக பட்டியலிட்டார். இதனிடையே ராஜேந்திரபாலாஜி தனது பிரச்சாரத்தின் போது அதிரடியான சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துக்களை தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.