என் கடன் பணி செய்து கிடப்பதே! அண்ணன் மறைந்த துக்கத்திலும்.. நிகழ்ச்சிகளை ரத்து செய்யாத சேகர்பாபு!
சென்னை: சொந்த அண்ணன் மறைந்த அடுத்த நாளே வழக்கம் போல் தனது துறை ரீதியிலான பணிகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டார் அமைச்சர் சேகர்பாபு.
என் கடன் பணி செய்து கிடப்பதே என்பதற்கு உதாரணமாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சருடன் ஒன்றாக கலந்துகொண்டார் அமைச்சர் சேகர்பாபு.
இதனிடையே திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.
இரவு 9.30க்கு நடந்த சம்பவம்.. அமைச்சர் சேகர்பாபு சகோதரர் தற்கொலை! இதுதான் காரணம்? போலீஸ் விசாரணை!
அமைச்சரின் அண்ணன்
தனது சொந்த அண்ணன் தேவராஜ் நேற்று காலமான நிலையில், தனது நிகழ்ச்சிகள் எதையும் ரத்து செய்யாமல் பொதுவாழ்வில் புயல் போல் சுழன்று வருகிறார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. இன்று நடைபெறவிருந்த இந்துசமய அறநிலையத்துறை நிகழ்ச்சியை ஒத்தி வைப்பது பற்றி அதிகாரிகள் கேட்டதற்கு அதனை திடமாக மறுத்து, திட்டமிட்டபடி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.
திருச்செந்தூர் கோவில்
இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பணிகளை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், அதில் பங்கேற்று முதல்வரை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு. என் சோகம் என்னோடு தான் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப அமைச்சர் சேகர்பாபுவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
கனிமொழி பங்கேற்பு
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் திருச்செந்தூர் கோவில் திருப்பணிகள் தொடக்க விழாவில் கனிமொழி எம்.பி.யும் தலைமைச் செயலகத்திற்கு வந்து பங்கேற்றார். இதனிடையே திருச்செந்தூரில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
பணிகள் வேகமெடுக்கும்
பக்தர்கள் பயன்பாட்டிற்கான தங்கும் விடுதிகள், சலவைக் கூடம், சுகாதார வளாகம், பேருந்து நிலையம், திருமண மண்டபங்கள், பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி தயாரிப்பு கட்டடம், பணியாளர் குடியிருப்பு, உள்ளிட்ட கட்டிடப் பணிகள் இனி திருச்செந்தூரில் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.