கோயில் ஆபரணங்கள்.. தெய்வத்துக்காக எந்தவொரு விமர்சனத்தையும் சந்திக்க தயார்.. அமைச்சர் சேகர் பாபு பளிச்
சென்னை: கோவில்களில் காணிக்கையாகப் பெறப்பட்ட ஆபரணங்களை ஆய்வு செய்ய 3 ஓய்வுபெற்ற நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கோயில்களில் பயன்படாமல் உள்ள எதுவும் தெய்வத்திற்குப் பயன்படும் எனில் அதற்காக எந்த விமர்சனத்தையும் சந்திக்கத் தயார் என்றும் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோருடன் இணைந்து ஆய்வு நடத்தினார்.
2018ஆம் ஆண்டு மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்துக்கு உள்ளான வீர வசந்தராயர் மண்டபத்தில் நடைபெறும் சீரமைப்பு பணிகள் பார்வையிட்டார்.
கோவில் நகைகளை உருக்கி.. அப்படியே பிஸ்கட்டுகளாக மாற்றும் சேகர் பாபு.. அரசின் பெரிய பிளான்.. என்ன?
அமைச்சர் சேகர்பாபு பேச்சு
மீனாட்சியம்மன் கோயிலில் வளாகத்தில் மேம்படுத்தப்பட்ட ஒதுவார் பயிற்சி பள்ளியைத் தொடங்கி வைத்த அமைச்சர் சேகர் பாபு, மீனாட்சியம்மன் கோயில் யானை பார்வதியின் உடல்நிலை நேரில் பார்வையிட்டுக் குறித்துக் கேட்டறிந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறுகையில் "2018ஆம் ஆண்டு மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்து சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தோம்.
ஆகம விதி சிக்கல்?
இந்த மண்டபத்தைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளப் பல முறை டெண்டர் விடப்பட்டது. இருப்பினும், யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. இதில் என்ன பிரச்சினை உள்ளது என ஆராய்ந்து, விரைவில் புதிய டெண்டர் விடப்படும். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மண்டபம் சீரமைக்கப்படும். இதற்குத் தேவையான நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும். மேலும், இந்த பணிகளின் காரணமாக மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதில் ஆகம விதி சிக்கல் உள்ளதா என ஆராய்ந்து கருத்துக் கேட்டு முடிவெடுக்கப்படும். இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
ரோப் கார் பணிகள்
ஓதுவார் பயிற்சி பள்ளியில் புதிதாக 6 பேருக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அழகர்கோவில் பாதையை அகலப்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளதால் அந்த பணிகள் விரைவு படுத்தப்படும். சோளிங்கர் மற்றும் அய்யர் மலை ஆகிய இரண்டு கோயில்களில் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, 2 ரோப் கார் திட்டங்கள் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். மேலும் 5 கோயில்களில் ரோப் கார் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்தும் விரைவில் முடிவெடுக்கப்படும்.
ஆக்கிரமிப்பு பணிகள்
தமிழ்நாடு முழுதும் 188 இடங்களில் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டில் குத்தகைக்குக் கொடுக்கப்பட்ட கோயில் நிலங்கள் கூட முறையாக மீட்கப்படவில்லை. ஆனால், திமுக ஆட்சி வந்த சில மாதங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டு உள்ளது. இன்னும் 65க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டி உள்ளது,
வாடகை
கோவிலுக்கு சொந்தமான கடைகளின் வாடகை அதிகமாக உள்ளது எனப் பலர் நீதிமன்றத்திற்குச் சென்று உள்ளனர். வாடகை நிர்ணயம் குறித்து முடிவு செய்ய ஒரு குழு உருவாக்கப்பட்டு உள்ளது, தமிழகத்தில் உள்ள கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்திய ஆபரணங்கள் கடந்த 9 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை வைத்துக் கொண்டு எதுவும் இதுவரை செய்யப்படவில்லை.
கோயில் நகைகள்
இந்த நகைகளில் தெய்வங்களுக்குப் பயன்படுத்தக் கூடிய நகைகளை நேரடியாகப் பயன்படுத்தவும், பயன்படுத்த இயலாத நகைகளை உருக்கித் தங்கக் கட்டிகளாக மாற்றப்படும். அந்த நகையை வங்கிகளில் சேமிக்கப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு கோயில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களை 3 மண்டலங்களாகப் பிரித்து 3 ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் நகைகள் பிரிக்கப்பட்டு உருக்கும் பணிகள் நடைபெறும். இதில் யாருக்கும் எந்த லாப நோக்கமும் இல்லை.
விமர்சனத்தைச் சந்திக்கத் தயார்
ஒவ்வொரு கோயிலும் எவ்வளவு தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் பெறப்பட்டதோ அதற்கேற்ப வரவு வைக்கப்படும். நகைகள் என்று இல்லை கோயில்களில் பயன்படாமல் உள்ள எதுவும் தெய்வத்திற்குப் பயன்படும் எனில் அதற்காக எந்த விமர்சனத்தையும் சந்திக்கத் தயாராகவே உள்ளேன். சட்டத்தின் ஆட்சி நடைபெறும் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை நேர்மையாக, உண்மையாக நடத்தப்படும்" என்று அவர் கூறினார்.