தமிழர்கள் பிரதமர் மோடியை பாராட்ட வேண்டும் -அமைச்சர் செல்லூர் ராஜூ
சென்னை: ஐ.நா.சபையில் தமிழின் பெருமைகளை எடுத்துக்கூறும் வகையில் பிரதமர் மோடி பேசியதற்காக அவரை தமிழர்கள் பாராட்ட வேண்டும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை பொறுத்தவரை தாம் பங்கேற்கும் அதிமுக கூட்டங்களில் கலகலப்பாக பேசி அங்கிருக்கும் இறுக்கத்தை தளர்த்துவார். மேலும், செய்தியாளர்களை சந்தித்தாலும் தனது பேட்டியை தலைப்புச் செய்தியாக வரும் படி அதிரடி கருத்துக்களை கூறி அசத்துவார்.
இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற ஐ.நா.சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி ''யாதும் ஊரே யாவரும் கேளீர்'' என்ற புறநானுற்று வரிகளை மேற்கோள் காட்டி பேசியிருந்தார். இந்நிலையில், அதற்காக தமிழர்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பாராட்ட வேண்டும் என்றும், அது நமது கடமை எனவும் இன்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், ஐ.நா. சபையில் உலகத் தலைவர்கள் மத்தியில் பிரதமர் மோடி தமிழை பெருமைப்படுத்தியுள்ளதாக கூறியிருக்கிறார். மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேட்டி பாஜகவினரையே கூச்சமடைய வைத்துள்ளது.
இதனிடையே தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், அதற்கு உதாரணமே சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீதான கைது நடவடிக்கை என்றும் கூறினார். யார் தவறு செய்தாலும் அதிமுக அரசு அதை வேடிக்கை பார்க்காது என்றும், தயவு தாட்சன்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.