"ஸ்டாலின் நல்லா இருக்கணும்".. சொன்னவர் யார் தெரியுமா? சாட்சாத் அமைச்சர் செல்லூர் ராஜூவேதான்!!
மு.க. ஸ்டாலின் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: "ஸ்டாலின் நல்லா இருக்கணும்" என்று சொன்னவர் யார் தெரியுமா? சாட்சாத் அமைச்சர் செல்லூர் ராஜூவேதான்!!
இன்று மதுரையில் செய்தியாளர்களை அமைச்சர் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் ஓ.ராஜா டிஸ்மிஸ் செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு "தவறு செய்ததால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தம்பியான ஓ.ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக கட்டுக்கோப்பான கட்சி, கட்சியில் யார் குற்றம் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
தூங்க மாட்டேன்
இதையடுத்து, "மத்திய, மாநில அரசுகள் சிறுபான்மையினருக்கு எதிரான அரசியலை செய்து கொண்டிருக்கின்றன. விரைவில் இருவரும் துரத்தியடிக்கப்படுவார்கள். அதுவரை நான் தூங்க மாட்டேன் என்று ஸ்டாலின் சொல்லி இருக்கிறாரே, அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
நல்லா இருக்கணும்
அதற்கு அமைச்சர் செல்லூர் ராஜு, "‘மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நலமுடன் இருக்க வேண்டும். எதிரிகள் வலுவாக இருந்தால்தான் எங்களுக்கு வேலை அதிகரிக்கும். நாம் சிறப்பாக பணியாற்ற முடியும். அப்போது தான் அதிமுக-வினர் இன்னும் சுறுசுறுப்பாக பணியாற்றுவார்கள்.
சுறுசுறுப்பு
கலைஞர் வல்லமை பொருந்தியவர் என்பதால்தான் திமுகவை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எதிரியாக எதிர்க்கட்சியாகக் கருதினார்கள். அவரை எதிர்த்தால்தான் அதிமுகவினர் சுறுசுறுப்பாக பணியாற்றினர்.
மன உளைச்சல்
அதைப் போலவே, ஸ்டாலின் செயல்படுவார் என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால், அவர் போகிற போக்கைப் பார்த்தால், கூடிய விரைவில் தூக்கமிழந்து மன உளைச்சலால் பாதிக்கப்படுவார் என்று நினைக்கிறேன்." என்றார்.