கோட்டைக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின்... உற்சாகம் பொங்க வரவேற்ற அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கோரிக்கை மனு அளிப்பதற்காக தலைமைச் செயலகம் சென்ற திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் செங்கோட்டையன் உற்சாகம் பொங்க வரவேற்றுள்ளார்.
கொரோனா பதற்றம் தணிந்து தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும் போது பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தக்கோரி திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். திமுக எம்.எல்.ஏ.க்கள் எழிலரசன், ஆர்.டி.சேகர், தாயகம் கவி ஆகியோர் அவருடன் உடன் சென்றனர்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை சந்திக்க உதயநிதி தரப்பில் இருந்து நேற்று நேரம் கேட்கப்பட்டுள்ளது. எந்த மறுப்பும் தெரிவிக்காத அமைச்சர் செங்கோட்டையன் இன்று பிற்பகல் 3 மணிக்கு நேரம் ஒதுக்கியிருந்தார். அதன் பேரில் அவரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க வந்த உதயநிதியை, செங்கோட்டையன் இன் முகத்துடன் வரவேற்று அவரது கோரிக்கைகளை கவனமாக கேட்டுக்கொண்டார்.
மேலும், தன்னை சந்திக்க வந்த விருந்தாளியான உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு காஃபி, ஸ்வீட், பழங்கள் உள்ளிட்ட ஸ்நாக்ஸ்களை வரவழைத்து கொடுத்துள்ளார். ஆனால், அதை எதையும் சாப்பிடாத உதயநிதி ஸ்டாலின் தங்கள் கோரிக்கை குறித்து பரிசீலித்து பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்தி வைத்தால் மட்டும் போதும் என கூறியிருக்கிறார்.
ஒரு 2 நாட்கள் அவகாசம் கொடுங்கள், முதலமைச்சரிடம் பேசிவிட்டு சொல்கிறேன், எனத் தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், உதயநிதியை காஃபியாவது குடிக்குமாறு கூறியுள்ளார். புன்னகையுடன் அதனை மறுத்த உதயநிதி, சுமார் 10 நிமிட சந்திப்பை நிறைவு செய்து அங்கிருந்து புறப்பட்டார்.
அமைச்சர் செங்கோட்டையனுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு.. 10-ம்வகுப்பு தேர்வை ஜூலையில் நடத்தக் கோரிக்கை
உதயநிதியை பொறுத்தவரை பேசுவதை விட செயல்பாடுகள் அதிகம் இருக்க வேண்டும் என அடிக்கடி நிர்வாகிகள் மத்தியில் கூறுவார். அந்த வகையில் பத்தாம் வகுப்பு தேர்வு விவகாரத்தில் வெறுமனே ஆலோசனையை நடத்தி அத்தோடு அந்த விவகாரத்தை முடித்துவிடாமல், களத்தில் இறங்கியிருப்பதை கட்சியின் சீனியர்கள் சிலரே வியப்போடு பார்க்கின்றனர்.
அண்மையில் எதிர்க்கட்சிக்கு உரிய மரியாதையை தலைமைச் செயலாளர் தரவில்லை என திமுக எம்.பி.க்கள் புகார் கூறிய நிலையில், இன்று திமுக பிரதிநிதிகளை கண்ணியமாக வரவேற்று அவர்களின் கோரிக்கை மனுவை அமைச்சர் செங்கோட்டையன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.