Exclusive: அரசியல் நாகரீகம் தெரியாதவர் எடப்பாடி... கலைஞர் படம் பற்றி நெகிழும் அமைச்சர் சிவசங்கர்..!
சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அரசியல் நாகரீகம் தெரியாதவர் என்று கூறுகிறார் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.
கருணாநிதி படத்திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைத்து வந்ததன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் ஈர்த்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
சட்டப்பேரவையில் கருணாநிதி படத்திறப்பு குறித்து அமைச்சர் சிவசங்கர் பிரத்யேக முறையில் ஒன் இந்தியா தமிழிடம் பகிர்ந்துகொண்டதன் விவரம் பின்வருமாறு;
சட்டசபையில் திறக்கப்பட்டது கருணாநிதி உருவப்படம்.. கீழே எழுதப்பட்ட வரிகள்தான் ஹைலைட்டே.. பிரமாதம்!
கலைஞர் படம்
''கலைஞர் படம் திறக்கப்பட்டதன் மூலம் சட்டப்பேரவைக்கு தான் கூடுதல் பெருமை என்று சொல்ல வேண்டும். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்து அவரது பேரவை நடவடிக்கைகளை கவனித்திருக்கிறேன். மிகவும் நுணுக்கமாக சட்டப்பேரவையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் கவனிப்பார். எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும். யார் என்ன பேசுகிறார்கள் என்பதை செவிகொடுத்து கேட்கத் தவறமாட்டார்.''
அரசியல் நாகரீகம்
''கவனிக்காததை போலவே இருக்கும், ஆனால் கேள்விகளை உள்வாங்கி அதற்கான பதிலை துறை சார்ந்த அமைச்சர்களை விட நீண்ட விளக்கம் கொடுப்பார் கலைஞர். இப்படிப்பட்ட பல்வேறு சிறப்புகளை கொண்ட கலைஞரின் படத்திறப்பு விழாவில் அமைச்சராக பங்கேற்றதை எண்ணி பெருமைப்படுகிறேன். இந்த விழாவுக்கு அரசியல் நாகரீகத்துடன் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.''
கலைஞரின் சாதனை
''ஆனால் அதிமுக மட்டும் விழாவில் கலந்துகொள்ளவில்லை. இது போன்ற செயல்கள் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் நாகரீகம் தெரியாது என்பதை எடுத்துக்காட்டுகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அழைத்து வந்து கலைஞரின் படத்தை திறக்க வைத்ததன் மூலம் இந்தியாவின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் முதலமைச்சர். ஆளுநரும், குடியரசுத் தலைவரும் கலைஞர் குறித்து பேசும் போது நீங்கள் ஒன்றை கவனித்தீர்களா என்று தெரியவில்லை, அதாவது அவர்களிடம் இருந்த பேச்சுக் குறிப்பை கடந்து தனிப்பட்ட முறையில் கலைஞரின் சாதனைகளை சுட்டிக்காட்டி புகழாரம் சூட்டினர்.''
அழைப்பிதழ்
''கலைஞர் படத்திறப்பு விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டது பற்றி கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ''விழாவில் பங்கேற்பதற்காக சட்டப்பேரவைக்குள் அவர் வந்த போது தான் நான் பார்த்தேன். சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அரசு தரப்பில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் அவர் விழாவில் பங்கேற்றிருக்கிறார். இதில் கூறுவதற்கு வேறொன்றுமில்லை.'' எனக் கூறினார்.''