அதிகாரிகளை வெளுத்து வாங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...!
சென்னை: மக்கள் அளிக்கும் புகார்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத தாம்பரம் நகராட்சி அதிகாரிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்விகளால் துளைத்தெடுத்து விட்டாராம்.
தமிழகத்தில் மக்கள் பிரச்சனைகள் குறித்து எம்.எல்.ஏவோ, அமைச்சரோ அதிகாரிகளிடம் கேள்வி கேட்பது என்பது அரிய நிகழ்வாகத் தான் நடைபெறும். மனுக்களை பெறும் மக்கள் பிரதிநிதிகள், அப்படியா சரி பாத்துக்கலாம் போயிட்டு வாங்க என்பது தான், பொதுவாக அவர்கள் அளிக்கும் பதிலாக இருக்கும். இந்நிலையில் தமிழக அரசியலில் சற்று மாற்றம் தென்படத்தொடங்கியுள்ளது.
தருமபுரி திமுக எம்.பி.செந்தில்குமார் மக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் குறித்து உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு வருகிறார். சில இடங்களில் நேரடியாக ஆய்வு செய்தும் நடவடிக்கைக்கு பரிந்துரைக்கிறார். இந்நிலையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், சமீபகாலமாக மக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு துறை சார்ந்த அதிகாரிகளை கேட்டுக்கொண்டு வருகிறார்.
நகராட்சி, ஊராட்சி, அலுவலர்கள் அந்தந்த பகுதி மக்கள் தங்கள் தெருக்களிலோ, வார்டுகளிலோ ஏதேனும் குறைபாடு உள்ளதாக புகார் அளித்தால் அதனை சரி செய்துகொடுக்க வேண்டும் என்பது எஸ்.பி.வேலுமணியின் உத்தரவு. இந்நிலையில் தாம்பரம் நகராட்சி ஆணையராக உள்ள கருப்பையா முறையாக பணியாற்றவில்லை என்றும், இவரால் வரவிருக்கும் உள்ளாட்சித்தேர்தலில் நமக்குத்தான் பாதிப்பு ஏற்படும் என்றும் லோக்கல் நிர்வாகிகள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திடீரென யாருக்கும் சொல்லாமல் தாம்பரம் நகராட்சிக்கு சென்றுள்ளார். அங்கு ஆய்வு செய்த அவர், எவ்வளவு புகார் மனுக்கள் வந்துள்ளன, அதன் மீது நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பன உள்ளிட்ட பல கேள்விகளை கேட்டாராம். அமைச்சர் கேள்விகளால் துளைத்தெடுப்பார் என சற்றும் எதிர்பார்க்காத தாம்பரம் நகராட்சி ஆணையர் வியர்த்து கிறுகிறுத்து போனாராம்.
உள்ளாட்சித்தேர்தல் வருவதால் தான் அமைச்சரின் இந்த திடீர் ஆய்வு, அக்கறையெல்லாம் என்கின்றனர் தாம்பரம் பகுதி திமுக நிர்வாகிகள். எது எப்படியோ மக்களுக்கு வேலை நடந்தால் சரி.