முதலமைச்சரை பற்றி பேச செந்தில்பாலாஜிக்கு எந்த தகுதியும் இல்லை -அமைச்சர் தங்கமணி
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பற்றி பேசுவதற்கு திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜிக்கு எந்த தகுதியும் இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார்.
யாரை திருப்திப்படுத்த செந்தில்பாலாஜி அறிக்கை வெளியிடுகிறார் என்பது அனைவரும் அறிந்தது என அவர் கூறியுள்ளார்.
மின் கட்டணம் விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான தகவலை திமுக பரப்பி வருவதாக அமைச்சர் தங்கமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிமுகவில் 3 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர்...? 4 மணி நேரமாக விவாதித்த ஐவர் குழு
செந்தில்பாலாஜி அறிக்கை
மின் கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளை நடைபெறுவதாகவும், அமைச்சர் தங்கமணி எங்கே சென்றார் எனவும் வினா எழுப்பி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தார் செந்தில்பாலாஜி. அதில், தமிழக அரசுக்கு சொல்புத்தியும் கிடையாது, சுயபுத்தியும் கிடையாது என்றும், வெட்டி விளம்பரத்தில் மட்டுமே முதலமைச்சர் கவனம் செலுத்துவதாகவும் சாடியிருந்தார். மேலும், உங்களுக்கெல்லாம் கருணையில்லையா என அமைச்சர் தங்கமணிக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.
நியாயம்
கொரோனா பேரிடரில் நியாயமாக பார்த்தால் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்து மக்களையும், சிறு தொழில்முனைவோரயும் அரசு காத்திருக்க வேண்டும், ஆனால் அதை விடுத்து நீதிமன்றத்தில் அத்தனை சதவீதம் பேர் கட்டிவிட்டார்கள், இத்தனை சதவீதம் பேர் கட்டவில்லை என புள்ளிவிவர கணக்குச் சொல்வதாக செந்தில்பாலாஜி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிலையில் அவரது அறிக்கைக்கு பதிலடி தரும் வகையில் அமைச்சர் தங்கமணி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உண்மைக்கு மாறாக
அதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பற்றி செந்தில்பாலாஜிக்கு எந்த தகுதியும் கிடையாது என தெரிவித்துள்ளார். மின் கட்டணம் விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருவதாக சாடியுள்ளார். மேலும், அரசு மீது அபாண்டமாக பழி சுமத்துவதா? என்ற கேள்வியை அமைச்சர் தங்கமணி எழுப்பியுள்ளார். கொரோனா காலத்தில் அனைவரும் வீட்டிலிருப்பதால் மின் சாதனங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மறுப்பு
கூடுதலாக மின்சாரக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறுவது பொய் என்றும், மின் கட்டணம் வசூலில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கூடுதல் கட்டணம் எனக் கருதினால் அதற்காக முறையீடு செய்து நியாயம் பெற வழிமுறைகள் உள்ளதாகவும் கூறியுள்ளார். செந்தில்பாலாஜி யாரை திருப்திப்படுத்த அறிக்கை வெளியிடுகிறார் என்பது அனைவரும் அறிந்தது தான் எனத் தெரிவித்துள்ளார்.