முன் உதாரணமாக திகழ்ந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...! அதிகாரிகள் வியப்பு
சென்னை: தமிழக அரசால் கொடுங்கையூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பருக அதிகாரிகள் தயக்கம் காட்டிய நிலையில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதனை வாங்கி பருகி ஊருக்கே முன்னுதாரண செயலில் ஈடுபட்டார்.
தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சென்னை கொடுங்கையூரில் புதிதாக தொடங்கியுள்ளது தமிழக அரசு. சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள அந்த சுத்திகரிப்பு நிலையத்தில், நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு அதை பயன்பாட்டுக்கு உகந்த முறையில் மாற்றப்படுகிறது.
சுத்திகரிப்பு நிலையத்தை தொடங்கி வைத்த பின்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், மற்றும் உயர் அதிகாரிகள் பலர் சுத்திகரிப்பு ஆலையை பார்வையிட்டனர். அப்போது கழிவுநீரை சுத்திகரித்து நல்ல நீராக மாற்றி அதை கண்ணாடி குடுவையில் ஊற்றி எடுத்து வந்து அதிகாரிகள் விளக்கிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த தண்ணீரை கையில் வாங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சற்றும் தயங்காமல் பருகி, இதனால் எந்த கெடுதலும் ஏற்படாது, நூறு சதவீதம் பயன்படுத்தலாம் என்பதை உணர்த்தினார்.
இது அங்கிருந்த சில ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளுக்கு வியப்பை தந்தது. எங்கே நம்மையும் அமைச்சர் குடிக்கச் சொல்லிவிடுவாரோ என ஆளாளுக்கு நெளிந்தார்களாம். இதனை புரிந்துகொண்ட அமைச்சர் வேலுமணி அதிகாரிகள் யாரையும் சுத்திகரிக்கப்பட்ட நீரை குடிக்கச் சொல்லவில்லையாம். அவர்களும் நிகழ்ச்சி முடிந்தால் சரி என இருந்துவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார்கள்.
சமீபத்தில் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு விளம்பரத்தில் தொலைக்காட்சியில் தோன்றி மக்களிடம் பேசினார் அமைச்சர் வேலுமணி. அடுத்ததாக சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை பயன்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளை விழிப்புணர்வு ஏற்படுத்த சொல்லியுள்ளார். மொத்தத்தில், உள்ளாட்சித்துறை மீது மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.