தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் வேண்டாம்... நானும் போட்டுக்கொண்டேன் - விஜயபாஸ்கர்
தமிழக மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்க வேண்டாம் என்றும் மக்களின் அச்சத்தை போக்க தானும் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், மக்கள் அச்சமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள 'கோவிஷீல்டு' மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த 'கோவேக்சின்' ஆகிய 2 தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 16ஆம் தேதி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் முதற்கட்டமாக 166 மையங்களில் கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
கடந்த ஏழு நாட்களில் நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணியில் பிரதமர், மத்திய அமைச்சர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளனர்.
I got my covaxin shot! Thanks to the team @gmcrgggh for the seamless experience. Appeal everyone to do it when your turn comes. Let's end #Covid19 together. #COVIDVaccination @MoHFW_INDIA @drharshvardhan @CMOTamilNadu @RAKRI1 @ETRajan1 @TNDME1 @TNDPHPM pic.twitter.com/i3PZFW4no2
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) January 22, 2021
இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கோவிட் தடுப்பூசியை இன்று போட்டுக் கொண்டார். இன்று காலை 9 மணிக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டது. அதற்கு முன்னதாக அவருக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு பரிசோதனை செய்யப்பட்டது.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், முன்களப்பணியாளர்கள் கொரோனா தடுப்பூசியை அச்சமின்றி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார். தயக்கத்தை போக்கவே தான் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகவும் தெரிவித்தார்.