என் வழி தனி வழி... புது ரூட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர்... தொலைநோக்குடன் அரசியல் மூவ்..!
சென்னை: அதிமுகவில் நடந்து வரும் அதிகாரப் போட்டியில் யார் பக்கமும் சாயாமல் தன்னை நியூட்ரலாக காண்பித்து வருகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
அமைச்சரவையில் உள்ள பலர் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆதரவாளர்களாக தங்களை பகிரங்கமாக வெளிக்காட்டி வரும் நிலையில் தொலைநோக்குடன் அரசியலில் அடியெடித்து வைக்கிறார் விஜயபாஸ்கர்.
ஊடகப்பேட்டிகளில் துறைசார்ந்த விவகாரங்களை மட்டுமே பேசும் இவர், அரசியலில் எதுவும் எப்போதும் நடக்கலாம் என்பதால் அதுபற்றி இவர் வாய் திறப்பதில்லை.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? மாணவர்கள் உயிர்தான் முக்கியம்.. அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
அதிமுக அதிகாரம்
அதிமுகவில் யார் பெரியவர் என்ற போட்டியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இந்தப் பலப்பரீட்சைக்கு ஆதரவாக அமைச்சர்கள் சிலர் வெளிப்படையாகவே தங்களது நிலைப்பாட்டை உணர்த்துகின்றனர். இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே நுணுக்கமான அரசியல் செய்து வருகிறார். அணி சேரா அமைச்சராக வலம் வருகிறார்.
மிகக்கவனம்
அமைச்சர் விஜயபாஸ்கரை பொறுத்தவரை மற்ற அமைச்சர்களை காட்டிலும் மிக அதிக முறை ஊடகங்களில் பேட்டிக் கொடுத்தவர். இப்போதும் பேட்டிக் கொடுத்து வருபவர். ஆனால் ஒரு முறை கூட தனது துறை சார்ந்த கேள்விகளை தவிர உட்கட்சிபிரச்சனை தொடர்பான கேள்விகளுக்கு அவர் பதில் அளித்ததில்லை. அரசியலிலும், வானிலையிலும் எதுவும் எப்போதும் நடக்கலாம் என்பதால் எதற்கு அவசரப்படுவானேன் என எண்ணுகிறார் விஜயபாஸ்கர்.
தனி டீம்
அமைச்சர் விஜயபாஸ்கரின் முழுக்கவனமும் இப்போது தனது தொகுதியில் தான் இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் விஜயபாஸ்கர் போட்டியிடுவார் எனக் கூறப்பட்டாலும் மணப்பாறை தொகுதியையும் அவர் தேர்வு செய்து வைத்துள்ளதாக தெரிகிறது. இந்த இரண்டு தொகுதிகளிலும் தனி டீமை களமிறக்கி களப்பணியை சத்தமின்றி தொடங்கிவிட்டார். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது போல், 2021 தேர்தலில் முதலில் தொகுதியில் ஜெயித்தால் தானே மற்றதெல்லாம் என்ற யதார்த்தத்தை உணர்ந்திருக்கிறார் விஜயபாஸ்கர்.
இருவர் மீதும்
இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவர் மீதும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிறிய மனவருத்தம் இருப்பதாக கூறுகின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். இதன் காரணமாகத் தான் அவர் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் பெரியளவில் ஈடுபாடு காட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.