அவசரம்.. அதான் ஹெல்மெட் போடாம போய்ட்டேன்.. கோர்ட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
Recommended Video
மதுரை: அவசரத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றுவிட்டதாகவும், இனி மேல் இது போன்று நடக்காது என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அமைச்சர் விஜய பாஸ்கர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கிராமத்தில் நவம்பர் 10ம் தேதி சுகாதார நல் வாழ்வு முகாமில் நடந்தது. அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரம் ஒன்றில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டினார்.
இது தொடர்பாக, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறியதாவது: தமிழக சுகாதாரத் துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கிராமத்தில் சுகாதார நல்வாழ்வு முகாம் நடைபெற்றது.
விழிப்புணர்வு பிரச்சாரம்
அப்போது சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், 100-க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது, அதில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் தலைக் கவசம் அணியவில்லை.
மீறப்பட்ட உத்தரவு
அங்கு உயர்நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்தும் இலுப்பூர் போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
நீதிமன்றம் விசாரணை
அந்த மனு நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில், அமைச்சர் விழிப்புணர்வுப் பிரசாரத்தில் யதார்த்தமாக கலந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.
பெரிதுபடுத்தாதீர்கள்
ஆகவே, இதனை பெரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எனவே, இதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்று கூறப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் கூறியதாவது:தலைக்கவசம் பாதுகாப்புக்காக அணிவது. அது சுகாதாரத் துறை அமைச்சர் உள்பட அனைவருக்கும் பொருந்தும்.
பிரமாணப்பத்திரம் தாக்கல்
அப்போது, நடந்த சம்பவத்தை அமைச்சர் தரப்பில் நியாயப்படுத்த தேவை இல்லை என்று கூறினர். மேலும், தலைக்கவசம் அணியாமல் சென்றதற்கு பொறுப்பேற்கும் விதமாக, அமைச்சர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க நேரிடும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
மீண்டும் விசாரணை
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வந்தது. அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அவசரத்தில் சென்றேன்
அதில் கூறப்பட்டிருந்த விவரம் வருமாறு:அவசரத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றுவிட்டேன். இனி மேல் இது போன்று தவறு நடக்காது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை ஏற்ற உயர் நீதிமன்றம், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கை முடித்து வைத்தனர்.