"ஜஸ்ட் 2 வாரம்தான்.. ஆனால், என் கைகள் கட்டப்பட்டுவிட்டன.. முட்டுக்கட்டை வேறு.. விஜயபாஸ்கர் விளக்கம்
2 வாரத்தில் கொரோனா பரவல் வீரியம் அதிகமாகும் என்கிறார்கள்
சென்னை: "இன்னும் 2 வாரங்கள்தான்.. அதுக்குள்ள கொரோனா வேகம் அதிகமாகும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.. களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டிய இந்த நேரத்தில், இப்படி ஒரு முட்டுக்கட்டைகள் உள்ளது"என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளர்.
இந்தியாவில் 2வது அலை வேகமாக பரவி வருகிது.. இது ஆபத்து நிறைந்தது என்றும் சொல்லப்பட்டு வருகிறது.. ஏராளமான விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்த ஆய்வில் இறங்கி உள்ளனர்.
இதனிடையே உலக நாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவிலும் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.. தமிழகத்திலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தள்ளாத வயதிலும் உற்சாகமாக தடுப்பூசி போட்டுக் கொண்ட 103 வயது பாட்டி!
விஜயபாஸ்கர்
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கொரோனா தொற்று 2-வது அலையின் தாக்கம் தீவிரமாகி வருவது குறித்தும், அதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில்கள்தான் இவை:
நன்னடத்தை
"தேர்தல் முடிந்துவிட்டது... ஆனாலும் தேர்தல் நன்னடத்தை விதிகள் இன்னமும் நடைமுறையில் உள்ளன. இந்தியா முழுக்க கொரோனா பரவல் தாக்கம் தீவிரமாகி வருகிறது... இதுவரை 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் சுகாதாரத்துறைக்கு தேவையான ஆலோசனை, அறிவுரைகளை, அமைச்சர் அருகில் இருந்து வழங்கும்போது இந்த பணிகள் இன்னும் வேகமாக நடக்கும்.. ஆவர்களும் உற்சாகமாக செயல்படுவார்கள்.
விதிமுறை
ஆனால் ஒரு சிக்கல் இருக்கு.. தேர்தல் ஆணையம் கொரோனா தொடர்பாக அமைச்சர் கூட்டம் மட்டும் நடத்தலாம் என்று சொல்கிறது.. அதேசமயம் இப்படிப்பட்ட சூழலில், களத்தில் இறங்கி பணிபுரியலாம் என்றால், இந்த நேரத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் முட்டுக்கட்டையாக உள்ளது... தேர்தல் விதிமுறையால் கைகள் கட்டப்பட்டு உள்ளன... முழுமையாக செயல்படவும் முடியவில்லை.
ஆறுதல்
தொற்று வேகமாக பரவுகின்ற காலகட்டத்தில் டாக்டர்கள், நர்சுகளின் பங்கு முக்கியமானது... அவர்களை சந்தித்து ஊக்கப்படுத்துவது அவசியமாகும்... அதுபோன்ற செயல்களில் ஈடுபட முடியாமல் இருப்பது மிகுந்த வேதனை தருகிறது.. மக்கள் பதட்டத்துடன் இருக்கக் கூடிய இந்த நேரத்தில் அவர்களுக்கு ஆறுதலையும், தைரியத்தையும் தரவேண்டும்... இன்னும் 2 வாரத்தில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்...
மருந்து
எனவே, தமிழகத்தில் வலுவான சுகாதார கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறோம். அதனை முழுமையாக பயன்படுத்த வேண்டும்... அதனால், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா சிகிச்சைக்கான 'ரெம்டிசிவர்' மருந்தினை கூடுதலாக வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதார மந்திரியிடம் வலியுறுத்தி உள்ளேன்" என்றார்.