ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை... அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜராகிறார்
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜராகிறார்.
ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்வது தொடர்பாகவும், ஜெயலலிதாவுக்கு அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஆலோசித்திருக்கலாம் என்ற அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்த கடந்த டிசம்பர் 18ம் தேதி ஆஜராக ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆணையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். தொடர்ந்து, ஜனவரி 8ம் தேதி விஜயபாஸ்கர் ஆஜராக ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பியது.
அதன் அடிப்படையில், அமைச்சர் விஜயபாஸ்கர் இன்றும், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நாளையும் ஆஜராக உள்ளனர்.
இதுவரையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், நர்சுகள், ஜெயலலிதாவின் உறவினர்கள், பணியாளர்கள் என பலரிடம் விசாரணை நடந்துள்ளது.