ராஜேந்திரபாலாஜியை கவனமா பேசச்சொல்லுங்க... முதல்வரிடம் சக அமைச்சர்கள் கோரிக்கை
சென்னை: நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கவனமாக பேசச்சொல்லுமாறு, முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் சக அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் முறையிட்டார்களாம்.
அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை பொறுத்தவரை அதிரடியான கருத்துக்களை கூறி அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி கொள்வார். இப்படித்தான் அண்மையில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூரை பன்னிக்குட்டி என்றும், ரப்பர் குண்டுகளால் வயிற்றிலேயே சுட வேண்டும் எனவும் பேசியது பெரும் சர்ச்சையானது. மேலும், எதிர்க்கட்சி நிர்வாகிகளை பற்றி பேசினாலும் அவன், இவன் என்று ஒருமையில் திட்டி தீர்த்துவிடுவார்.
இதுமட்டுமல்லாமல் மோடியை தமிழகத்தின் டாடி என்றும், பாஜகவினரையே விஞ்சும் வகையில் அந்தக் கட்சியை பற்றி ஊடகங்களில் பெருமையாகவும் பேசுபவர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. பாஜகவுடனான கூட்டணி விவகாரத்தில் அதிமுக தலைமையே அடக்கி வாசித்த நேரத்தில் இவர் அதை அதகளப்படுத்தினார். இதன் விளைவு சிறுபான்மையினரை அதிகமாக கொண்ட வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் வெற்றிவாய்ப்பு நூலிழையில் தவறவிடப்பட்டது.
சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஓட்டுக்கேட்க சென்ற இடத்தில் ஏதாவது பேசினால், அது நமக்குத்தான் பின்னடைவைத் தரும் என்றும், தேவையில்லாத மோதல்களுக்கு வழிவகுக்கும் எனவும் நாங்குநேரி தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிமுக நிர்வாகிகள் அமைச்சர்களிடம் புலம்பியுள்ளனர். அவர்களும் இது குறித்து இ.பி.எஸ்., ஒ.பி.எஸ்.சிடம் தெரிவித்து ராஜேந்திரபாலாஜியை கவனமாக பேசச் சொல்லுமாறு தெரிவித்தார்களாம்.
மேலும், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்தை ஆமோதித்தார்களாம் ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும். இது குறித்து ராஜேந்திரபாலாஜியை தொடர்பு கொண்ட அதிமுக தலைமை பிரச்சாரத்தில் வார்த்தைகளை கவனமாக கையாளுமாறும், கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தி விட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டனராம்.