சட்டசபைத் தேர்தல் 2021: தேமுதிக உடன் தொகுதி பங்கீடு - விஜயகாந்த் உடன் அமைச்சர்கள் சந்திப்பு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி சந்தித்து பேசியுள்ளனர். சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை அதிமுக அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். சட்டசபைத் தேர்தலுக்காக பாமக உடன் கூட்டணி பங்கீடு உறுதிப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் தேமுதிக உடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 12ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.
ஆளும் அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பாஜக கூட்டணியில் உள்ளது உறுதி செய்யப்பட்டு விட்டது. பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த விவரத்தை அக்கட்சியின் தலைவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துள்ளனர். விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல பாமக உடன் தொகுதி பங்கீடு முடிந்து விட்டது. அந்த கட்சிக்கு 23 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேமுதிக உடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில், கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். தேமுதிகவிற்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் எந்தெந்த தொகுதிகளில் தேமுதிக போட்டியிடும் என்பது பற்றிய விபரங்கள் விரைவில் வெளியாகும்.