பார்முலாவை கையில் எடுத்த திமுக.. 9 அமைச்சர்களுக்கு முதல்வர் தந்த முக்கிய "டாஸ்க்".. பின்னணி என்ன?
சென்னை: தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலினின் இந்த உத்தரவிற்கு பின் பல முக்கியமான காரணங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றது.
இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்
இந்த வருட இறுதிக்குள் நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநகராட்சிகளுக்கான மேயர் தேர்வும் விரைவில் நடக்க உள்ளதால் தமிழ்நாடு அரசியல் களம் சூடாக உள்ளது.
தேர்தல் நிலவரம்
நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், 40 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கு நடந்த தேர்தலில் 138 இடங்களில் திமுக வென்றுள்ளது. 2 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் இன்னொரு பக்கம் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்த 1,381 இடங்களில் 1,118 இடங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெற்றுள்ளன. திமுக மட்டும் தனியாக 974 இடங்களை வென்றுள்ளது. அதிமுக கூட்டணி 220 ஒன்றிய இடங்களை வென்றுள்ளது. அதிமுக தனியாக 212 இடங்களை வென்றுள்ளது. பா.ம.க. 47 இடங்களை ஒன்றிய கவுன்சிலில் பெற்றுள்ளது. வேறு எந்த கட்சியும் மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகளை வெல்லவில்லை.
வெற்றி
ஊரக உள்ளாட்சி தேர்தல் வரலாற்றை மிகப்பெரிய வெற்றியை திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் பதிவு செய்துள்ளன. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடப்பதற்கு முன்பே நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல்களை விரைவில் நடத்த ஏற்பாடு செய்வோம் என்று தமிழ்நாடு அமைச்சர்கள் சிலர் தெரிவித்து இருந்தனர். இந்த வருட இறுதிக்குள் நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல்களை நடத்த உள்ளோம் என்று மூத்த அமைச்சர் துரைமுருகன் கூட குறிப்பிட்டு இருந்தார்.
அறிவிப்பு
ஆனால் இதுவரை மாநகராட்சி, நகராட்சி தேர்தல்களுக்கான அறிவிப்புகள் வெளியாகவில்லை .அதே சமயம் இன்னொரு பக்கம் முக்கியமான சில மாவட்டங்களில் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சி, நகராட்சி தேர்தல்களை மனதில் வைத்துதான் முதல்வர் ஸ்டாலின் இந்த முடிவை எடுத்து இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
விவரம்
அதன்படி மாவட்டங்களில் வளர்ச்சிப் பணியை துரிதப்படுத்த நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அமைச்சர்கள் விவரம் பின்வருமாறு:
திருநெல்வேலி - அமைச்சர் ராஜ கண்ணப்பன்
கோயம்புத்தூர் - அமைச்சர் செந்தில் பாலாஜி
காஞ்சிபுரம் - அமைச்சர் தா.மோ.அன்பரசன்
சேலம்- அமைச்சர் கே.என்.நேரு
தேனி -அமைச்சர் ஐ.பெரியசாமி
திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி - பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு
தருமபுரி - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
தஞ்சாவூர் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
மயிலாடுதுறை, நாகப்பட்டினம் -அமைச்சர் மெய்யநாதன்
காரணம் விளக்கம்
இதற்கு தமிழ்நாடு அரசு அளித்துள்ள விளக்கதில் வளர்ச்சிப் பணிகளை துரிதபடுத்த பல்வேறு மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமித்து உள்ளோம். வளர்ச்சி திட்டங்கள் துரிதமாக மக்களுக்கு சென்றடைகிறதா என்பதை இவர்கள் கண்காணிப்பார்கள். அதேபோல் இயற்கை பேரிடர்கள், நோய் தொற்றுகள் ஏற்படும் போது அதற்கான நிவாரண மற்றும் தடுப்பு பணிகளையும் இவர்கள் மேற்கொள்வார்கள் என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
உண்மை என்ன
ஆனால் சரியாக நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களுக்கு முன் இவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முக்கியமான நகராட்சி மற்றும் மாநகராட்சிகளான திருநெல்வேலி, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், சேலம், தேனி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு குறி பார்த்து அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கோயம்புத்தூர், சேலம், திருப்பத்தூர், தருமபுரி, உள்ளிட்ட சில மாவட்டங்களை திமுக எப்படியாவது நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறது.
அமைச்சர்கள் நியமனம்
இதனால் அவர்கள் தேர்தல் ரீதியான பணிகள் , வளர்ச்சி பணிகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ச்சிப் பணிகளை துரிதபடுத்த பல்வேறு மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பதால் திமுக இப்போதே மாநகராட்சி, நகராட்சி தேர்தல்களுக்கு தயாராகிவிட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாகவே ஆளும் காட்சிகள் அமைச்சர்களை தேர்தல் களத்தில் இறக்குவது வழக்கம்.
வழக்கம்
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஒரு இடைத்தேர்தல் வந்தால் போதும் மொத்தமாக அமைச்சர்கள் கூட்டம் தேர்தல் களத்தில் நிற்கும். ஆளும் கட்சிகள் இப்படி தேர்தல் நேரத்தில் அமைச்சர்களை களமிறக்கி அவர்கள் மூலம் துரிதமாக பணிகளை மேற்கொள்ளும். அதே பார்முலாவை முதல்வர் ஸ்டாலினும் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.