உதய்பூர் டெய்லர் கொலை! தமிமுன் அன்சாரி கண்டனம்! சட்டத்தின் மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும்!
சென்னை: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் கொலை செய்யப்பட்ட நிகழ்வு கண்டிக்கத்தக்கது என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு விவகாரத்திலும் சட்டத்தின் மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஆட்சேபனைக்குரிய கருத்தை வெளியிட்டார் என்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்காரர் கன்ணையா லால் என்பவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். எந்த ஒரு தவறையும் சட்டத்தின் வழியாகவும், ஜனநாயக வழி முறைகளிலுமே எதிர்கொள்ள வேண்டும். அதுவே சரியான தீர்வை பெற்றுத் தரும்.
இதற்கு மாற்றமான வழிமுறைகள் யாவும் நீடித்த சச்சரவுகளையும், பேரழிவுகளையுமே ஏற்படுத்தும். வெறுப்பு அரசியலும், காவி மதவாதமும் ஏற்படுத்தி வரும் தாக்கங்கள், வெவ்வேறு புதிய வடிவங்களில் நாட்டை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருவது மிகவும் கவலையளிக்கிறது.
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் பிரச்சனைகளுக்கு ,சட்டத்தின் துணை கொண்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதன் மூலம், அடுத்தடுத்த விபரீதங்களை தடுக்க முடியும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
ராஜஸ்தானில் அமைதியை ஏற்படுத்திட சகல தரப்பும் இணைந்து பணியாற்றிட வேண்டும் என்றும், மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
4 நாட்களில் தூக்கில் போடனும்.. கோபத்தை அடக்க முடியல! உதய்பூர் கொலை குறித்து ராஜஸ்தான் அமைச்சர்