தினகரனுக்கு இருக்கிற அக்கறை கூட அழகிரிக்கு இல்லையே...!
எங்களை அழகிரி வந்து பார்க்கவில்லை என திருவாரூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சென்னை: இவ்ளோ நடந்துக்கிட்டு இருக்கு... அழகிரி என்னதான் பண்ணிட்டு இருக்கார்?
கஜா வந்து பாதி தமிழ்நாடே நாசமாயிடுச்சு. டெல்டாவாசிகளுக்கு இன்னும்கூட சாப்பாடு, தண்ணி பிரச்சனை இருந்துட்டு இருக்கு. 10 நாள் ஆகியும் கரண்ட் இல்லாமல் தவித்து வருகிறார்கள். எதிர்கால வாழ்க்கை என்னாகும்னுகூட தெரியாம முழிச்சிக்கிட்டு பீதியில உறைந்து இருக்கிறார்கள்.
தமிழக அரசு, மத்திய அரசு, கட்சி தலைவர்கள், தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள், நடிகர்களின் மன்றங்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், வணிகர்கள், அமைப்பு ரீதியான சங்கங்கள், பொதுமக்கள், ஏன் ஒன்னாம்கிளாஸ் குழந்தை, பிச்சைக்காரர்கள் வரை எல்லாருமே உதவி கொண்டு இருக்கிறார்கள்.
டெல்டாவாசிகள் கேள்வி
ஆனால் இந்த 10 நாளாக அழகிரி யாருக்கு என்ன செய்தார் என்பதுதான் டெல்டாவாசிகளின் பெரிய கேள்வியாக இருக்கிறது. கருணாநிதி இருக்கும்போதுதான் அழகிரிக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள், பஞ்சாயத்துகள், கட்சியிலிருந்தே ஒதுக்கப்படும் நிலை என்று ஆனது.
புயல் வாய்ப்பு
அவர் மறைந்தபிறகு மீண்டும் கட்சிக்குள் நுழைய முயற்சி எடுத்தார். முயற்சி சவால் ஆனது, சவால் மிரட்டல் ஆனது, மிரட்டல் கெஞ்சலானது, கெஞ்சல் ஆளையே காணாமல் போகடித்து விட்டது. மீண்டும் அரசியலுக்குள் நுழைய விருப்பமோ, எண்ணமோ, திட்டமோ ஏதாவது இருந்தால் இந்த கஜா புயல் வாய்ப்பையாவது பயன்படுத்தி இருக்கலாமே?
கருணாநிதி மகன்
அல்லது கோடிக்கணக்கான தொண்டர்களை கட்டிக் காத்து, இயக்கத்துக்காகவே இறுதி வரை வாழ்ந்து உலக தலைவர்களில் ஒருவராக விளங்கும் கருணாநிதியின் மகனாகவாவது புயல் பாதித்த மக்களுக்கு ஏதாவது செய்திருக்கலாமே?
திருவாரூர்
இப்படி அரசியல் லாபமும் இல்லாமல், தனிமனித கருணையும் காட்டாமல் யாருக்குமே எதுவுமே அழகிரி உதவி புரியாதது அவரது எதிர்காலத்துக்கு இழுக்கு ஆகாதா? டெல்டா பக்கம் முழுசும் போகாவிட்டாலும், குறைந்தபட்சம் திருவாரூர் பக்கமாவது போயிருக்கலாமே?
என்னதான் செய்தார்?
தன் குடும்ப வேர் அங்குதானே இருக்கிறது? எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிட சூழ்நிலையே வந்தாலும் அந்த மக்களிடம்தானே நேரில் போய் நிற்க வேண்டியிருக்கும்? அவர்களுக்காகவாவது ஏதாவது அழகிரி செய்திருக்கலாமே? இந்த ஆதங்கத்தை திருவாரூர் மக்களே வாய்திறந்து சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
குடும்ப உறுப்பினர்
அழகிரி என்றாலே, அனைவரிடமும் அன்பாக பேசுவார், எளிமையாக நடந்து கொள்வார், தொண்டர்களின் வீட்டு விசேஷங்களுக்கெல்லாம் அனாயாசமாக உள்ளே அந்த குடும்ப உறுப்பினராகவே மாறிவிடுவார், மனசு நிறைய பாசம்... இப்படியெல்லாம்தான் கடந்த காலங்களில் சொல்லப்பட்டு வருகிறது.
பசி.. தாகம்.. கண்ணீர்
அஞ்சாநெஞ்சன் என்ற பெயரையும் தாண்டி அழகிரியிடம் தொகுதி மக்கள் பார்த்தது அவரது பாசம்தான். ஆனால் தன் மாவட்டம் உள்ளிட்ட டெல்டாவாசிகளின் கண்ணீரும், பசியும், தாகமும், இன்னும் அழகிரிக்கு தெரியவில்லையா? புரியவில்லையா? இனியாவது மக்களுக்கு ஏதாவது செய்வாரா?