ஸ்டாலினை எதிர்க்க போவது உறுதி.. மு.க. அழகிரி பாஜகவில் இணைய போகிறார்?
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியால் நீக்கப்பட்ட மு.க.அழகிரி அவரது மரணத்துக்கு பின்னர் எவ்வளவோ முட்டி மோதியும் அவரால் மீண்டும் அக்கட்சியில் நுழைய முடியவில்லை. இதையடுத்து அவர் பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுகவில் சிறு வயது முதலே ஏராளமான போராட்டங்களில் கலந்து கொண்டவர் மு.க.ஸ்டாலின்தான். தேர்தல் பிரசாரங்கள் ஆகட்டும், போராட்டங்களாகட்டும், சிறை செல்வதாக இருந்தாலும் அனைத்தையும் தனது தந்தையுடன் சேர்ந்து செவ்வணே முடித்தவர் ஸ்டாலின்.
திமுகவின் வளர்ச்சிக்கு ஸ்டாலினின் பங்கும் அதிகம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவ்வாறிருக்கையில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி போர்க் கொடி உயர்த்தினார். அவரது ஆதரவாளர்களுக்கு முக்கிய பதவிகளை கொடுப்பதை ஸ்டாலின் தடுப்பதாக குற்றம்சாட்டினார்.
குடும்பத்தினர்
இதனால் ஸ்டாலினை கடுமையான வார்த்தைகளால் சாடினார். இதைத் தொடர்ந்து மு.கருணாநிதி, அழகிரியை கட்சியிலிருந்து நீக்கினார். பின்னர் அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கிய அவரது குடும்பத்தினரிடம் முயற்சி தோற்றுவிட்டது.
கருணாநிதி
இதையடுத்து கருணாநிதி உயிருடன் இருக்கும் போதே திமுகவுக்கு எதிரான கருத்துகளை அழகிரி கூறிவந்தார். இந்நிலையில் கருணாநிதி இறப்புக்கு பின்னர் அவரது சமாதிக்கு வந்த அழகிரி, இறப்பதற்கு முன்னர் என் தந்தை என்னிடம் சில விஷயங்களை கூறியுள்ளார். அதை நேரம் வரும் போது கூறுவேன்.
அழகிரி
என்னை திமுகவில் சேர்த்து கொள்ள தடையாக இருப்பது ஸ்டாலின்தான் என்றார். இதையடுத்து திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனும் திமுகவில் அழகிரியை சேர்க்கும் எண்ணம் இல்லை என்று கூறிவிட்டார். இதைத் தொடர்ந்து தன்னுடைய ஆதரவாளர்களை திரட்டி அழகிரி ஆலோசனை நடத்தி கொண்டே இருந்தார். மறுபுறம், ஸ்டாலின் திமுக தலைவராக பதவியேற்றார்.
பாஜகவில்
ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ள தயார் என அழகிரி வாய்விட்டு கூறியும் அவரை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. இதனால் அவரது கோபம் உச்சிக்கு சென்றது. பின்னர் சற்று அமைதி காத்து வரும் அழகிரி பாஜகவில் சேர உள்ளதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.
பாஜகவில் இணைவார்
இந்த நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது அவரோ தனக்கு மு.க.அழகிரி கட்சியில் சேருவது குறித்தெல்லாம் தெரியாது என கூறிவிட்டார். ரஜினியின் நண்பரான அழகிரி மற்றவர்கள் சொல்வது போல் அவரது ஆதரவு கட்சியான பாஜகவில் இணைவார் என்றே தெரிகிறது. மேலும் ஸ்டாலினை எதிர்ப்பதற்கு வலுவான கட்சி பாஜக என அழகிரி கருதுவதாகவும் கூறப்படுகிறது
அழகிரிக்கே
மதுரையில் அழகிரிக்கு ஆதரவாளர்கள் நிறைய உண்டு என்பதால் அழகிரியை வைத்து மதுரையை வளைக்கலாம் என்பது பாஜகவின் திட்டமாக உள்ளது. ஆனால் அழகிரிக்கே ஆதரவாளர்கள் இல்லையே. இதில் எங்கிருந்து வளைக்கிறது என்கின்றனர் அழகிரி எதிர்ப்பு பாஜகவினர்.
ஆண்டவனுக்குத்தான்
இதனால் திமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டால் தனக்கு நல்ல பதவி கிடைக்கும். ஒரு எதிர்காலம் உண்டு என அழகிரி கருதுகிறாராம். செந்தில் பாலாஜியையே சேர்த்து கொண்ட போது தன்னை நிச்சயம் சேர்த்து கொள்வர் என்று அழகிரி காத்திருக்க போவதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் எது உண்மை என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.