அண்ணன் அழகிரி காற்று அங்கிட்டும் இங்கிட்டுமா மாறுதே... குழப்பத்தில் ஆதரவாளர்கள்
Recommended Video
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் அரசியல் எதை நோக்கியது என்பது தெரியாமல் அவரது ஆதரவாளர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் மு.க. அழகிரி மீண்டும் அக்கட்சியில் இணைத்து கொள்ளப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன.
திமுக அறக்கட்டளைகளில் ஏதேனும் ஒன்றில் அழகிரி மகன் துரை தயாநிதிக்கு இடம் கிடைக்கும் என்பதால் அழகிரி திரும்பவும் கட்சிக்கு வருவார் என உற்சாகத்தில் இருந்தனர் ஆதரவாளர்கள். ஆனால் இது நடந்தேறவில்லை.
தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது.. ரஜினிதான் அதை நிரப்புவார்.. மு.க அழகிரி பரபரப்பு பேட்டி!
அழகிரி அணி உருவாக்கம்
அத்துடன் தமது பலத்தை வெளிப்படுத்த கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி, மாவட்டங்களில் கருணாநிதி அஞ்சலி கூட்டம் ஆகியவற்றை அழகிரி நடத்தினார். அதேநேரத்தில் திமுக தரப்பு, அழகிரி ஆதரவாளர்களுக்கு உறுப்பினர் சீட்டை புதுப்பிக்க வழங்காமல் ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டியது.
ஆதரவாளர்கள் ஆதங்கம்
இதனால் அதிர்ச்சி அடைந்தனர் ஆதரவாளர்கள். மாற்று கட்சிகளில் இருந்து பலரும் திமுகவுக்கு தாவியபோது அவர்களை எல்லாம் சேர்க்கும் போது ஏன் சொந்த அண்ணனை சேர்க்க தயக்கம்? என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர் அழகிரி ஆதரவாளர்கள்.
ரஜினி தரப்புடன் ஆலோசனை
இன்னொரு பக்கம் அழகிரி தரப்பும் ரஜினி தரப்பும் ஆலோசனை நடத்தியதையும் அவர்களது ஆதரவாளர்கள் அறிவார்கள். அழகிரியை பாஜகவும் வளைக்கப் பார்ப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அழகிரி அதற்கு பிடி கொடுக்கவில்லை என கூறப்பட்டது.
எச். ராஜா- அழகிரி சந்திப்பு
இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் வீட்டுக்கு அழகிரி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் எச். ராஜா இல்ல திருமணத்தில் தம்மால் பங்கேற்க முடியாது என்பதை நேரில் சொல்ல தாம் வந்ததாக அழகிரி கூறினார். அத்துடன் செய்தியாளர்கள் கேள்விக்கு திமுகவிலேயே தாம் இல்லையே எனவும் ஒரு பதிலை சொன்னார்.
அரசியல் வெற்றிடம்
தற்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருக்கிறது; அதை ரஜினிதான் நிரப்புவார் என கூறியிருக்கிறார். இது அழகிரி ஆதரவாளர்களை குழப்ப வைத்திருக்கிறது.
ரஜினி பக்கம் அழகிரி?
சில நாட்களுக்கு முன்னர் கூட திமுகவுக்கு எப்படியும் அழகிரி திரும்பி விடுவார் என பேசிக் கொண்டிருந்தனர் அவர்களது ஆதரவாளர்கள். தற்போது அழகிரியின் காற்று ரஜினி பக்கம் வீச தொடங்கியிருக்கிறது; இப்படி பேசினால் திமுக ஒட்டுமொத்தமாக கதவை அடைத்துவிடதா எனவும் ஆதங்கப்படுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
திமுகவுக்கு அழகிரி நெருக்கடி?
அதேநேரத்தில் தம்மை திமுக மீண்டும் சேர்க்க வேண்டிய ஒருவித நெருக்கடியைத் தரும் வகையில் அழகிரி பேசியிருக்க வாய்ப்பிருப்பதையும் மறுப்பதற்கில்லை என்றும் சமாதானமடைகின்றனர் ஆதரவாளர்கள்.. அடுத்தடுத்து அவரைபற்றி செய்திகள் வரும் நிலையில் இனி வரும் நாட்களில் அழகிரி புயல் மீண்டும் அரசியலில் மையம் கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.