"நேரம் நெருங்கிருச்சு.. தலைமை ஏற்க வா".. மு.க. அழகிரிக்கு அழைப்பு.. என்னாச்சு?
முக அழகிரிக்கு அழைப்பு விடுத்து கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன
சென்னை: ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்து வருகிறாராம் முக அழகிரி.. ஒருபக்கம் அதிமுக அல்லது பாஜகவை பலப்படுத்துவது, மற்றொரு பக்கம் திமுகவை பலவீனப்படுத்துவது என்ற திட்டத்தில் இறங்கி உள்ளாராம்... அதற்கேற்றபடி, "அஞ்சாநெஞ்சனே.. நேரம் நெருங்கிவிட்டது.. உண்மை தொண்டன் வெற்றியை உறுதி செய்ய வாரீர்" என்று அழகிரிக்கு ஆதரவான போஸ்டர்களும் கலகலத்து காணப்படுகின்றன.
அழகிரியை பொறுத்தவரை தென்தமிழகத்தை தன் பிடியில் வைத்திருந்தவர்.. மதுரை மண்ணின் அரசியல் ஹீரோவாக ஜொலித்தவர்.
சில பிரச்சனைகள் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும், இன்னமும் அழகிரிக்கு மவுசு குறையவில்லை.. உதயநிதி நியமனம் வரை நடந்து முடிந்துவிட்ட நிலையிலும், சத்தமே இல்லாமல் இருக்கிறார்.
இதை மட்டும் திமுக செஞ்சா.. ஸ்டாலின் முதல்வராவது ஈஸி.. வாக்குகளை லட்டு போல அள்ளலாம்.. கனவும் நனவாகும்
அமைதி
"யாரிடமும் எதுவும் பேசுவது இல்லை.. சென்னையிலுள்ள மகன் துரை வீடு, மதுரை வீடு என்று போய் போய் வருகிறார். அரசியல் குறித்து ஏதாவது முடிவெடுங்கண்ணே என்று நாங்கள் கேட்டால், 'அமைதியாக இருங்கள்' என்று மட்டும் சொல்வதாக இவரை பற்றின செய்திகள் வந்தன.
பாஜக
இதையடுத்துதான், ரஜினி கட்சியில் அழகிரி சேரப்போகிறார் என்று ஒரு குரூப் கிளப்பி விட்டது.. பிறகு பாஜக அழகிரியை தன் பக்கம் இழுத்து கொள்ள எல்லா முயற்சிகளையும் செய்து விட்டது என்று இன்னொரு பகீர் கிளம்பியது.. அதன்படி வெடித்து வந்ததுதான் கேபி ராமலிங்கம் விவகாரம்.. எனினும், பாஜகவில் சேர இதுவரை அழகிரி சம்மதிக்கவில்லை என்பதே உண்மை... ஸ்டாலினுக்கு எதிராக பிளான்களை அழகிரி வைத்திருப்பாரே தவிர, பாஜகவில் நிச்சயம் சேரவே மாட்டார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
பிரசாந்த் கிஷோர்
இப்போது அழகிரி குறித்த பேச்சு நிறைய அடிபடுகிறது.. இதற்கு காரணம் தேர்தல் காலம் நெருங்கிவிட்டது.. மற்றொன்று திமுகவிலேயே சில சீனியர்கள் கட்சி தலைமை மீது அதிருப்தியாக உள்ளது.. பிரசாந்த் கிஷோர் வந்ததில் இருந்தே தங்களுடைய முக்கியத்துவம் குறைந்துவிட்டதாகவும், அடிமட்ட தொண்டர்களை தலைமை கண்டுகொள்வதே இல்லை என்ற முணுமுணுப்புகளும் எழுந்து வருகிறது.. அழகிரி மட்டும் கட்சிக்குள் இருந்திருந்தால் எங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்காது என்று புலம்புவர்களும் பெருகி வருகிறார்கள்.
அன்பானவர்
எந்த தொண்டரிடத்திலும் இயல்பாக மனம் விட்டு பேசக்கூடியவர்.. அன்பாக பழக கூடியவர்.. இவரது சுபாவத்துக்கென்றே ஒரு தனி கூட்டம் இப்போதும் கட்சிக்குள் உள்ளது... இந்நிலையில்தான் அழகிரிக்கு போஸ்டர்கள் பரபரத்து காணப்படுகின்றன.. அதில், "அஞ்சாநெஞ்சனே.. நேரம் நெருங்கிவிட்டது.. உண்மை தொண்டன் வெற்றியை உறுதி செய்ய வாரீர்... கழக ஆட்சி என்றும் கலைஞர் ஆட்சி அமையட்டும்" என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
கோவை மாவட்டம்
வழக்கமாக அழகிரிக்கு மதுரை மண்டலத்தில்தான் போஸ்டர்கள் ஒட்டப்படும்.. அதை எப்போதுமே யாரும் பெரிதாக எடுத்து கொள்ள மாட்டார்கள். ஆனால், கொங்கு மண்டலத்தில் ஒட்டப்பட்டுள்ளது பல்வேறு விஷயங்களை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.. அதுமட்டுமில்லை, முதல்வர் வேட்பாளராக திமுக சார்பில் ஸ்டாலின் போட்டியிடுவார் என்று அனைவரும் எண்ணி கொண்டிருக்கும் நிலையில், "முக அழகிரிக்கு வெற்றியை உறுதி செய்ய வாரீர்" என்ற வாசகங்களுடன் அடங்கிய போஸ்டர்கள் அறிவாலயத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கட்சி தலைமை?
அழகிரி மீது மூத்த தலைவர்களுக்கு இருக்கும் மரியாதை இன்னமும் குறையவில்லை.. பாஜகவில் இவர் சேர மாட்டார் என்பது உறுதியாக தெரிந்தாலும், திமுகவின் பலத்தை நிச்சயம் தன் வியூகத்தால் தகர்ப்பார் என்றும் இவரது ஆதரவாளர்களும் நம்புகிறார்கள்.. அந்த வகையில், வரப்போகிற தேர்தலில் இவர் ரஜினியுடன் சேருவாரா? அல்லது வேறு ஏதாவது அதிரடி திட்டம் வைத்திருக்கிறாரா? அல்லது போஸ்டரில் உள்ளதுபோல உண்மை தொண்டன் வெற்றியை உறுதி செய்ய வர போகிறாரா என்பதெல்லாம் இனிமேல் தான் தெரியவரும்.