திமுகவில் அதிருப்தியாளர்களை அணி திரட்ட களமிறங்கும் மு.க. அழகிரி
சென்னை: திமுகவில் அதிருப்தியாளர்களை அணி திரட்ட விரைவில் மாவட்டம் தோறும் மு.க. அழகிரி சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளாராம்.
கருணாநிதி மறைந்த உடன் திமுகவுக்குள் மீண்டும் நுழைய மு.க. அழகிரி முயற்சிகளை மேற்கொண்டார். குறைந்தபட்சம் திமுகவின் அறக்கட்டளைகளில் ஒன்றில் மகனுக்கு பொறுப்பு வாங்கிவிடலாம் என முயற்சித்தார்.
ஆனால் ஸ்டாலின் தரப்பில் இருந்து சிக்னல் கிடைக்கவே இல்லை. கருணாநிதி நினைவிடம் நோக்கி தமது பலத்தை நிரூபிக்க முயற்சித்தார் அழகிரி. இருப்பினும் திமுகவில் அவர் இணைத்துக் கொள்ளப்படுவதற்கான எந்த சமிக்ஞையும் காட்டப்படவில்லை.
இதனால் அழகிரி மிகவும் அதிருப்தி அடைந்தார். மேலும் அழகிரி ஆதரவாளர்களுக்கு உறுப்பினர் சேர்க்கை படிவங்களும் வழங்கப்படாமலேயே புறக்கணிக்கப்பட்டனர். அதேநேரத்தில் அழகிரி எந்த ஒரு அரசியல் நடவடிக்கையையும் வெளிப்படுத்தாமல் இருந்தார்.
இன்று நல்ல நாள்.. வளர்பிறை.. உதயநிதிக்கு உயர்வு கொடுக்க நாள் குறித்த திமுக!
லோக்சபா தேர்தலின் போது தமது ஆதரவாளர்களை தினகரன் கட்சிக்கு வாக்களிக்க உத்தரவிட்டார். மேலும் நடிகர் ரஜினிகாந்துடன் தொடர்ந்தும் அழகிரி ஆலோசனை நடத்தி வந்தார்.
ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கும் போது அதில் அழகிரி தமது ஆதரவாளர்களுடன் இணைவார் என்றே கூறப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக தமது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில் மாவட்டந்தோறும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள அழகிரி திட்டமிட்டுள்ளாராம்.
இந்த சுற்று பயணத்தின் போது, ரஜினிகாந்துடன் இணைவது தொடர்பாக ஆதரவாளர்கள் கருத்தை அழகிரி கேட்க திட்டமிட்டிருக்கிறாராம்.