ரஜினியிடம் தொலைப்பேசியில் வாழ்த்து சொன்ன முக அழகிரி.. என்ன பேசினார்?
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் கட்சி அறிவிப்புக்கு அவரது நெருங்கிய நண்பரான முக அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் 3 வருடங்களுக்கு பிறகு அரசியல் கட்சி தொடங்கப்போவதை அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளார்.
அவர் சொன்னபடி 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். தேர்தலுக்கு நான்கு மாதங்கள் உள்ளதால் அதற்குள் அடிமட்ட நிர்வாகிகளை வரை நியமிக்க விரும்புகிறார்.
திமுக, அதிமுகவை விடுங்க.. ரஜினிகாந்த் சந்திக்க போகும் சவால்கள் என்ன.. எப்படி சமாளிப்பார்?
தமிழருவி மணியன்
அதற்காக இரண்டு பேரை கட்சியின் உயர்மட்ட பொறுப்பில் நியமித்துள்ளார். ஒருவர் தமிழருவி மணியன் மற்றொருவர் பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவர் அர்ஜூன் மூர்த்தி. தமிழருவி மணியன் மேற்பார்வையாளராகவும், அர்ஜூன் மூர்த்தி. தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்களுக்காக உயிர்
ரஜினி அரசியல் கட்சி குறித்து பேசுகையில், என் உயிரே போனாலும் அது மக்களுக்காக போகட்டும். தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு. நான் வெற்றியடைந்தாலும் அது மக்களின் வெற்றி என்று பேட்டியின் போது கூறினார்.
ஆன்மீக அரசியல்
ரஜினியின் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்,. ஆன்மீக அரசியல் நிச்சயம் வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வியூகம் அமைத்து பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
ரஜினிக்கு வாழ்த்து
ரஜினியின் அரசியல் வருகை குறித்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் அவரது நெருங்கிய நண்பரும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனுமாகிய முக அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினியிடம் தொலைப்பேசியில் அரசியலில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த முக அழகிரி, உடல் நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தினார்.
என்ன முடிவெடுப்பார்
ரஜினிகாந்தும் முக அழகிரியும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இருவருமே இந்த முறை சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை உண்டாக்கும் சக்திகளாக பார்க்கப்படுகிறார்கள். ரஜினி தனி கட்சி ஆரம்பித்துவிட்ட நிலையில், அழகிரியின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுகிறது. தனது ஆதரவாளர்களை சந்தித்து விரைவில் முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.