நாங்குநேரியும் நமக்கு முக்கியம்... கவனமாக இருங்கள்... ஸ்டாலின் அறிவுறுத்தல்
Recommended Video
சென்னை: காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடும் நாங்குநேரி தொகுதியும் நமக்கு முக்கியம் தான் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
விக்ரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து விக்ரவாண்டியில் திமுகவிம், நாங்குநேரியில் காங்கிரசும் களம் காண்கிறது. இந்நிலையில் திமுகவின் வெற்றிக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை போலவே காங்கிரஸ் வெற்றிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார் ஸ்டாலின்.
கடந்த இரண்டு நாட்களாக நாங்குநேரியில் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ஸ்டாலின், தொகுதி நிலவரம் குறித்து வேட்பாளர் ரூபி மனோகரன், திமுக தேர்தல் பொறுப்பாளர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோரிடம் கேட்டிருக்கிறார். அவர்களும் நமக்கு சாதகமாக இருக்கிறது, ஆளுங்கட்சி மீது மக்கள் கோபத்தில் இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.
இதைக்கேட்ட ஸ்டாலின், அப்படியெல்லாம் நினைத்து அசால்டாக இருந்து விடாதீர்கள், இந்த தொகுதியின் வெற்றியும் நமக்கு மிக முக்கியம் அதை மனதில் வைத்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துங்கள் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், திண்ணைப்பிரச்சாரம், நடை பிரச்சாரம் என ரூபி மனோகரனை அழைத்துக்கொண்டு தானே நேரடியாக களத்தில் இறங்கினார் ஸ்டாலின்.
இது குறித்து பேசிய காங்கிரஸ் முக்கிய நிர்வாகி ஒருவர், பரவாயில்லைப்பா, தளபதியை சும்மா சொல்லக்கூடாது, நாங்க கூட விக்ரவாண்டி அளவுக்கு நாங்குநேரிக்கு திமுக முக்கியத்துவம் தருமா என யோசித்தோம், ஆனால் இரண்டு தொகுதிகளையும் சமமாக பாவித்து முக்கியத்துவம் தருகிறார் என்றும், இது எங்களுக்கு உண்மையிலேயே ஆச்சரியம் தருவதாகவும் கூறினார்.