தபால்துறை தேர்வில் தமிழ் நீக்கம்: தமிழகம் போராட்ட களமாக மாறும்.. திருமா எச்சரிக்கை, ஸ்டாலின் கண்டனம்
சென்னை: தபால்துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட மாட்டாது என்ற மத்திய அரசின் அறிக்கைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அஞ்சல்துறைப் பணியிடங்களுக்கான தேர்வுகளைத் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதும் வசதி இதுவரை இருந்துவந்தது. கடந்த 2019 மே 16 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பிலும் பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதலாம் என்றுதான் கூறப்பட்டிருந்தது. திடீரென்று இப்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதலாம் என மாற்றியுள்ளனர். 2019 ஜூலை மாதம் 11 ஆம் தேதிதான் இந்தப் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது மாபெரும் அநீதி மட்டுமல்ல மோசடியுமாகும்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தி பேசாத மாநில மக்கள் மத்திய அரசு பணியில் அமர தகுதியானவர்கள் என்று அரசியல் சட்டம் உரிமை வழங்கியுள்ளது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையை மத்திய பாஜக அரசு மறந்து விடக்கூடாது. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செருப்பால் அடிச்சிக்கிட்டார் முகிலன்.. புகார் தந்த பெண்.. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படலாமா.. மனைவி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ''அஞ்சல் துறையில் போஸ்ட்மேன் உள்ளிட்ட பதவிகளுக்கு 1000 பணியிடங்களுக்கான தேர்வு நாளை நடைபெறவுள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில்தான் அந்தத் தேர்வுகளை எழுதவேண்டும் என்ற அறிவிப்பை மாற்றி வழக்கம்போலத் தமிழில் எழுத உத்தரவிடவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
மத்திய அரசு இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும். தமிழிலும் எழுத அனுமதிக்கவேண்டும். இல்லாவிடில் தமிழகம் மிகப்பெரிய போராட்டக்களமாக மாறும் என எச்சரிக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.