சீமான் தடாலடி கருத்து.. ஸ்டாலினுடன் சந்திப்பு.. ரூட்டை க்ளியர் செய்த விஜய்
Recommended Video
சென்னை: சினிமா தளபதி விஜயும், அரசியல் தளபதி மு.க.ஸ்டாலினும், இன்று ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து உள்ள சம்பவம் சமூகவலைத்தளங்களில் சூட்டைக் கிளப்பியுள்ளது.
விஜய் தொடர்பாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்தில் தெரிவித்த ஒரு பரபரப்பு பேட்டிக்கு பிறகு ஸ்டாலினுடன் இன்று நடைபெற்ற இந்த சந்திப்பு விஜய்க்கு கண்டிப்பாக முக்கியத்துவமான ஒன்று.
விஜய் மற்றும் ஸ்டாலின் சந்திப்பு ஏன் சமூக வலைத்தளங்களில் இந்த அளவுக்கு முக்கியத்துவமாக பேசப்படுகிறது? என்பதை அறிந்துகொள்ள இரண்டு நாட்களுக்கு முன்பு சீமான் தெரிவித்த கருத்தை அறிந்து கொள்வது அவசியம்.
முக ஸ்டாலினை சந்தித்த விஜய்.. துரைமுருகனுடன் கைகுலுக்கல்.. கல்யாண வீட்டில் கலகல சந்திப்பு
விஜய் சூப்பர் ஸ்டார்
அன்றைய தினம், சீமான் அளித்த பேட்டியில், "நடிகர் ரஜினிகாந்துக்கு பிறகு, சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற தகுதியானவர் தம்பி விஜய்" என்று, பாராட்டி இருந்தார். வேறு ஒரு இயக்குனரோ, அல்லது நடிகரோ, இதுபோல கருத்தை தெரிவித்து இருந்தால் பரவாயில்லை. ஆனால் அரசியல் கட்சியை நடத்தி வரும் சீமான் இதுபோன்ற ஒரு கருத்தை தெரிவித்ததால், நாம் தமிழர் கட்சியுடன் விஜய் நெருக்கம் காட்டுகிறாரா என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது.
நீண்ட கால நட்பு
சீமானுக்கும், விஜய்க்குமான நட்பு இன்று நேற்று உள்ளது அல்ல, நீண்ட காலமாக இருந்து வரும் ஒன்று. ஆனால் ஒரு கட்டத்தில், விஜய் தொடர்பாக சில விமர்சனங்களை முன்வைத்த சீமான், எனது தம்பி சிம்பு புகழ்பெற்ற நடிகராக வருவார் என்று கூறிய கருத்து அந்த காலகட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், மீண்டும் தற்போது விஜய்யை பாராட்டி உள்ளார் சீமான்.
சமூக பொறுப்புணர்வு
விஜய் நடித்து சமீபத்தில் வெளியான மெர்சல் மற்றும் சர்க்கார் ஆகிய திரைப்படங்களில், ஜிஎஸ்டி முதல் உள்ளூர் கந்துவட்டி அரசியல் வரை, விலாவாரியாகப் பேசினார். நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா வீடு, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான அப்பாவி வீடுகளுக்கு நடிகர் விஜய் திடீரென சென்று ஆறுதல் தெரிவித்திருந்தார். இப்படி திரைப்படங்களில் மட்டுமல்லாது, நிஜ வாழ்க்கையிலும் சமூக பொறுப்புணர்வு சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
பரபரப்பு
விஜய்க்கு அரசியல் ஆர்வம் இருப்பது போன்ற ஒரு தோற்றம் இருந்துவரும் நிலையில், சீமான், விஜய்யை புகழ்ந்து தள்ளியது மேலும் அனுமானங்களை அதிகரித்தது. மெர்சல் திரைப்படத்தில் பல காட்சிகள், நாம் தமிழரின் கொள்கைகளை காட்சிக்கு காட்சி எதிரொலித்து இருக்கும். எனவே விஜய், நாம் தமிழர் கட்சியுடன் இணக்கமாக இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்தது. அரசியலில் திமுகவும், நாம் தமிழர் கட்சியும் எதிரான நிலைப்பாட்டில் இருக்கக்கூடியவை.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
இன்று முரசொலி செல்வம் மற்றும் செல்வி தம்பதியினரின் பேத்தி நிச்சயதார்த்த விழா இன்று நடைபெற்றது. அதற்கு விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த விழாவில் கலந்து கொள்ள சென்ற போதுதான் ஸ்டாலினை சந்தித்துள்ளார் விஜய். அவர்கள் பரஸ்பரம் உரையாடிக் கொண்டுள்ளனர். இதன் மூலமாக ஒரு விஷயம் உறுதியாகி உள்ளது. விஜய் எந்த ஒரு அரசியல் சார்பு நிலையையும் எடுக்கவில்லை, அவர் அனைத்து கட்சிகளுக்கும் செல்லப்பிள்ளையாகத்தான் உள்ளார், ஆளும் கட்சிகளைத் தவிர என்பதுதான் அந்த தகவல். எனவே கடந்த சில நாட்களாக விஜய் அரசியல் தொடர்பாக பரவிய வதந்திகளுக்கு இன்று இந்த இரு தளபதிகளின் சந்திப்பும் முடிவுரை எழுதி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.