ஒன்று புரிகிறது.. எடப்பாடியாரும், ஸ்டாலினும் இதில் ரொம்ப தெளிவாக இருக்கிறார்கள்.. கடும் போட்டி!
சென்னை: ஒன்று மட்டும் புரிகிறது.. விவசாயிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி விட வேண்டும் என்று ஆளும் தரப்பும் குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் கடும் முயற்சிகள் எடுத்து வருகிறார்கள்.
விவசாயிகள்தான் இந்த நாட்டின் முதுகெலும்பு. அதிலும் தமிழகத்தில் பெரும்பாலான வாக்காளர்கள் யார் என்றால், விவசாயிகள் மற்றும் விவசாய கூலி செய்பவர்கள்தான். எனவே, விவசாயிகளின் வாக்குகள் எந்த பக்கம் செல்கிறதோ அந்த பக்கம் தான் வெற்றி பெறும் என்பதில், அரசியல் தலைவர்கள் தெளிவாக இருப்பார்கள்.
ஆட்சியில் இருக்கும்போதும் சரி, இல்லாத போதும் சரி, விவசாயிகள் பிரச்சினையில் எல்லா கட்சிகளும் கை வைக்க பயப்படுவது இதனால்தான்.
புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு: களத்துமேடு மரத்தடியில் மு.க. ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்!
விவசாயிகளின் வாக்கு வங்கி
விவசாயம் மீதான உண்மையான அக்கறை.. உணவு பற்றாக்குறை ஏற்பட்டு விடக்கூடாது என்ற பொதுநல நோக்கு.. என்பதையெல்லாம் தாண்டி விவசாயிகள் வாக்குவங்கி அனைத்து அரசியல் கட்சியினருக்கும் அவ்வப்போது கண் முன் வந்து செல்லும் ஒரு காட்சி. முன்னாள் முதல்வர் கருணாநிதி திருவாரூர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். காவிரி பாசனப் பகுதியில் இருந்து வந்தவர் என்பதால் இயல்பாகவே விவசாயிகள் மீது அக்கறை இருக்கும். தனது குடும்பத்தையும் விவசாய குடும்பம் என்று அழைத்துக் கொள்வதில் அவருக்கு பெருமிதம் உண்டு.
எடப்பாடி பழனிச்சாமியின் விவசாயி கோஷம்
ஜெயலலிதா தன்னை விவசாயி என்று அழைத்துக் கொள்ள முடியவில்லை. கலைத் துறையை சார்ந்தவர் என்ற அளவில் நிறுத்திக் கொள்வார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி சமீபகாலமாக "விவசாயி" என்ற கோஷத்தை முன்வைத்து வருகிறார். நானும் ஒரு விவசாயிதான் என்று அவர் வாரத்துக்கு ஒரு முறையாவது பேசுவதை கேட்க முடிகிறது. உண்மைதான்.. சேலம் மாவட்டத்தில், அவரது குடும்பம் விவசாய பாரம்பரியத்தில் இருந்து வந்த குடும்பம். ஆனால் அதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொல்வதற்கான காரணம் என்ன? விவசாயிகளுக்கு எதிராக இந்த அரசு செயல்படாது என்பதை விவசாயிகள் மத்தியில் பதிய வைக்க வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
நெற்கதிர்களுடன் முதல்வர்
அதிலும் ஒரு டிவி சேனலுக்கு அளித்த பேட்டியின்போது நெற்கதிர்களை கையில் வைத்துக் கொண்டு போஸ் கொடுத்திருந்தார் எட்பாடியார். இதன்பிறகு, விவசாயிகளின் காவலனே.. காவிரி காத்தவரே.. .என்பது போன்ற போஸ்டர்கள் அடித்து ஒட்டப்படுவது அதிமுகவில் வழக்கமாகிவிட்டது.
இந்த நிலையில்தான் விவசாய சட்ட மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்ததை வைத்து இந்த பிம்பத்தை உடைக்க முயற்சியில் திமுக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக
மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய 3 சார் வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக இன்று ஆர்ப்பாட்டம் நடத்திவருகிறது. தமிழகம் முழுக்க 3500 இடங்களில் போராட்டம் நடைபெற்ற நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பி பகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் போராட்டத்தில் பங்கேற்றார். போராட்டத்தின்போது ஸ்டாலின் பேசியதாவது: விவசாயிகள் வயிற்றில் மத்திய அரசு அடித்துக் கொண்டிருக்கிறது மாநில அரசு விவசாயிகளை காலில் போட்டு மிதித்து வருகிறது. இதை எதிர்த்து தான் மக்களுக்கும் உணர்த்தத்தான் இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஸ்டாலின் விளாசல்
மத்தியிலே ஒருவர் இருக்கிறார். அவர் எப்போதும் ஏழைத்தாயின் மகன் என்று சொல்வார். அவர் இப்போது மக்கள் அனைவரையும் ஏழைகளாக்கி வருகிறார். மாநிலத்தில் ஒருவர் இருக்கிறார். தன்னை எப்போதும் விவசாயி விவசாயி என்று சொல்லுவார். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகுதான் விவசாயிகள் வாழ்க்கையே கெடும் சூழ்நிலை அமைந்து இருக்கிறது. நானும் விவசாயிதான் என்று அடிக்கடி கூறக்கூடிய எடப்பாடி இதுவரை விவசாயிகளுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இவ்வாறு அவர் காட்டமாக பேசினார்.
ஸ்டாலின் படங்கள்
அது மட்டும் கிடையாது. நெல் பயிரிடப்பட்ட விவசாய கழனியில் ஸ்டாலின் நடந்து செல்வது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் விவசாய குடும்பத்திலிருந்து வந்தவர் கிடையாது. நானும் விவசாய குடும்பத்திலிருந்து வந்து, விவசாய நிலத்தில் கால் வைத்தவர் தான் என்று ஸ்டாலின் சொல்லாமல் சொல்கிறார். இந்த புகைப்படங்கள் திமுகவினரால் அதிகமாக பரப்பப்பட்டு வருகின்றன.
விவசாயிகளின் நண்பன்
சென்னையில் இருந்தாலும், விவசாயிகளிடமிருந்து திமுக தலைவர் ஸ்டாலின் வெகுதூரத்தில் போய்விடவில்லை என்பதை உளவியல் ரீதியாக இந்த புகைப்படம் பதிய வைக்கிறது. முதல்வர் கையில் கதிர்களை வைத்திருக்கும் புகைப்படமும், ஸ்டாலின் வயலில் நடந்துசெல்லும் புகைப்படமும் உணர்த்துவது ஒன்றைத்தான். இரு கட்சியினரும், விவசாயிகளின் நண்பனாக காட்டிக் கொள்ள விழைகிறார்கள் என்பதுதான் அது. அப்படி நண்பனாக காட்டிக்கொள்வது மட்டும் கிடையாது. செயலில் யார் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதுதான் விவசாய பெருங்குடி மக்களின், மற்றும் இந்த சமூகத்தின் நலனை தீர்மானிக்கப் போகும் விஷயம். புகைப்படங்கள் அல்ல.