மேடையில் மு.க.ஸ்டாலின்.. எம்.பி. அந்தியூர் செல்வராஜ் கீழே.. திடீரென கிளம்பிய சர்ச்சை!
அருந்ததியின மக்கள் அதிருப்தியை ஸ்டாலின் பெற்று வருகிறார்
சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மேடையில் உட்கார்ந்திருந்தபோது, அருந்ததியர் சமூக எம்பி கீழே அமர வைக்கப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இது மிகப்பெரிய சர்ச்சையை திமுகவுக்கு ஏற்படுத்தியுள்ளது.
திமுக சார்பில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது..
பொதுவாக, இந்த நிகழ்ச்சிகளில், ஒவ்வொரு ஊரிலும் மேடையின் ஒரு மூலையில், அந்தந்த மாவட்ட செயலாளரை சாதாரண சேரில் உட்கார வைப்பர்.. அதேபோல, மேடையிலும், மேடைக்கு கீழேயும் வேறு யாரையும் அருகில் சேர்ப்பதில்லை.. அங்கே நிற்க கூட அனுமதி இல்லை.
தனி சேர்
அந்த வகையில், நேற்று ஈரோட்டிலும் இந்த நிகழ்ச்சி நடந்தது.. அப்போது, மேடைக்கு கீழே திமுக துணை பொது செயலாளரும், ராஜ்யசபா எம்பி-யுமான அந்தியூர் செல்வராஜை தனியாக நிற்க வைத்தனர்... இதன்பிறகு, ஸ்டாலின் மேடைக்கு வந்தார்.. அவர் பிறகு, ஒரு சேர் வழங்கப்பட்டது.. அந்த சேரில் அவர் தனியாக உட்கார வைக்கப்பட்டார்.
அருந்ததியினர்
இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது ஸ்டாலின் மேடையில் பேசும்போது, "முதல்வர் இபிஎஸ்க்கு, திடீரென அருந்ததியினர் மீது பாசம் வந்து, பொல்லானுக்கு சிலை, மணி மண்டபம் அமைப்பதாக அறிவித்துள்ளார்... 2019 பிப்ரவரியில் சங்ககிரியில் நடந்த ஆதித்தமிழர் மாநாட்டில், 'பொல்லானுக்கு சிலை, மணி மண்டபம் அமைத்து, அரசு மூலம் விழா எடுக்கப்படும் என்று அறிவித்ததே நான்தான்.. நான் என்ன அப்போது சொன்னேனோ, அதைத்தான் முதல்வர் இப்போது அறிவித்துள்ளார்.
அரசாணை
கடந்த, 2008 ஜனவரி 23-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி அரசில், அருந்ததியர் உள் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது... இதையடுத்து, 2009 பிப்ரவரி 24ல் துணை முதல்வரான நான், அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை சட்டசபையில் தாக்கல் செய்து, 2 வாரத்தில் அரசாணை வெளியிட்டேன்... இதை, பெருமையுடன் தெரிவிக்கிறேன்" என்றார்..
கேள்வி
இந்த சம்பவம் 2 வகையான சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.. அந்தியூர் செல்வராஜ்க்கு துணை பொதுச் செயலர், எம்பி பதவியை தந்தது திமுகதான் என்றாலும், இடஒதுக்கீடு கொடுத்த ஸ்டாலின், அவருக்கு மேடையிலும் இடம் கொடுத்திருக்கலாமே.. அதை விடுத்து, மேடையின் கீழே, அவரை உட்கார வைக்க வேண்டும்? என்ற சலசலப்பு கிளம்பி உள்ளது.
சர்ச்சை
அருந்ததியர்களுக்கு தனி ஒதுக்கீடு பெற்று தந்ததாக கூறும் ஸ்டாலின் அச்சமுதாய எம்பியையே மேடைக்கு கீழே உட்கார வைத்தது, திமுக அந்த சமுதாய மக்களுக்கு எந்த அளவுக்கு மதிப்பளிக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக சிலர் முணுமுணுக்கின்றனர்.
இடஒதுக்கீடு
இடஒதுக்கீடு அளித்தது ஓட்டு அரசியல் என்றாலும், தனிமனித மதிப்பை குலைக்கும் வகையில் திமுக நடந்து கொண்டது சரியில்லை என்றும், இதன் மூலம் திமுகவின் மதிப்புதான் குறையும் என்றும் கருத்துக்கள் பரவி வருகின்றன.. இது எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு எம்பிக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண அருந்ததியின சமுதாய சாதாரண மக்கள் எவ்வாறு நடத்தப்படுவார்கள் என்ற கேள்வியை கிளப்பி விட்டுள்ளது.