க அன்பழகனுக்கு இறுதி அஞ்சலியில் உருக்கம்.. இனி எப்போது பார்ப்போம் என ஸ்டாலின், துரைமுருகன் கண்ணீர்!
சென்னை: திமுக பொதுச் செயலாளர் க அன்பழகனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்ட போது ஸ்டாலினும் துரைமுருகனும் கண்ணீர் விட்டு அழுதனர். அதிலும் துரைமுருகன் குலுங்கி குலுங்கி அழுததை அடுத்து அவரை மற்ற தலைவர்கள் தேற்றினர்.
Recommended Video
திமுக பொதுச் செயலாளர் க அன்பழகன் வயோதிக பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1 மணிக்கு காலமானார்.
அவரது உடல் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள பேராசிரியரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் மாலை 4.30 மணிக்கு மேல் கீழ்ப்பாக்கம் இல்லத்திலிருந்து வேலங்காடு இடுகாட்டுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

இறுதி மரியாதை
இந்த ஊர்வலத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், கனிமொழி எம்பி, டிஆர் பாலு, பொன்முடி, திருச்சி சிவா, ஆ ராசா, வைரமுத்து, உதயநிதி உள்ளிட்டோர் பேராசிரியரின் இறுதி ஊர்வலத்தில் நடந்து சென்றனர். பின்னர் க அன்பழகனின் உடல் வேலங்காடு மின் மயானத்தை அடைந்தது. அங்கு அன்பழகனின் உடல் தகன மேடையில் வைக்கப்பட்டது. அப்போது அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், டிஆர் பாலு, கனிமொழி, வைரமுத்து உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர்.

திமுக பொருளாளர்
அப்போது அன்பழகனின் கால் மாட்டில் கற்பூரம் ஏற்றியதும் தொட்டு வணங்கிய போது துக்கம் தாளாமல் ஸ்டாலின் கண்ணீர் விட்டார். அவரை திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தேற்றினார். திமுக பொருளாளர் துரைமுருகனும் கண்ணீர் விட்டு கதறினார். பின்னர் அவரை அருகில் இருந்த டிஆர் பாலு, வைரமுத்து உள்ளிட்டோர் தேற்றினர். எனினும் அழுதபடியே வெளியே வந்தார். இதையடுத்து அன்பழகனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

பெரியப்பா
க அன்பழகனை கருணாநிதியின் மகன், மகள்கள் பெரியப்பா என்றே அழைப்பர். அன்பழகனுக்கு ஸ்டாலின் எழுதிய இரங்கல் செய்தியிலும் எனக்கு அக்காள் உண்டு. அண்ணன் இல்லை. பேராசிரியர்தான் என் அண்ணன்" என்றார் தலைவர் கலைஞர்! எனக்கும் அத்தை உண்டு. பெரியப்பா இல்லை. பேராசிரியப் பெருந்தகயையே பெரியப்பாவாக ஏற்று வாழ்ந்தேன். அப்பாவை விட பெரியப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவதுதான் சிரமம். ஆனால் நானோ பேராசிரியப் பெரியப்பாவினால் அதிகம் புகழப்பட்டேன். அவரே என்னை முதலில், " கலைஞருக்குப் பின்னால் தம்பி ஸ்டாலினே தலைவர்" என்று அறிவித்தார். எனக்கு வாழ்வின் பெருமையே எனக்கு வழங்கிய பெருமகன் மறைந்தது என் இதயத்தை பிசைந்தது.

தேறுதல்
அப்பா மறைந்தபோது பெரியப்பா இருக்கிறார் என்று ஆறுதல் பெற்றேன். இன்று பெரியப்பாவும் மறையும் போது என்ன சொல்லி என்னை நானே தேறுதல் சொல்வேன்?! பேராசிரியர் இருக்கிறார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். இனி யாரிடம் ஆலோசனை கேட்பேன்? இனி யாரிடம் பாராட்டு பெறுவேன்? என்ன சொல்லி என்னை நானே தேறுதல் கொள்வேன்?!

முப்பால்
பேராசிரியப் பெருந்தகையே! நீங்கள் ஊட்டிய இனப்பால்-மொழிப்பால்-கழகப்பால் இம் முப்பால் இருக்கிறது. அப்பால் வேறு என்ன வேண்டும்?! உங்களது அறிவொளியில் எங்கள் பயணம் தொடரும் பேராசிரியப் பெருந்தகையே! கண்ணீருடன் மு.க.ஸ்டாலின் என தனது கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications