முகம் முழுக்க சோகம்.. அன்பழகன் இறுதி ஊர்வலத்தில் நடந்தே சென்ற ஸ்டாலின்.. தொண்டர்கள் நெகிழ்ச்சி
சென்னை: திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் இறுதி ஊர்வலத்தின்போது இடுகாடு வரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரி கனிமொழி ஆகியோர் தொண்டர்களோடு நடந்தே சென்றனர்.
Recommended Video
உடல் நலக் குறைவு காரணமாக, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அன்பழகன் சனிக்கிழமை அதிகாலை, 1 மணியளவில் மரணமடைந்தார். இதையடுத்து, அதிகாலையில் மருத்துவமனையிலிருந்து அவரது உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பல்வேறு தலைவர்களும், தொண்டர்களும் அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்தநிலையில், மாலை 4 மணிக்கு மேல் அன்பழகன் உடல், அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். வேலங்காடு என்ற பகுதியில் உள்ள இடுகாட்டில் அன்பழகன் உடல் தகனம் செய்யப்படுவதாக அறிவிக்கப் பட்டிருந்ததால் ஊர்வலம் அதை நோக்கி சென்றது.
இந்த ஊர்வலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், அவரது சகோதரியும், லோக்சபா எம்பியுமான கனிமொழி, மூத்த தலைவர்கள் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
ஸ்டாலின் தனது சட்டைப்பையில் கருப்புநிற பேட்ஜ், குத்தி இருந்தார். கருணாநிதி தந்தை என்றால், அன்பழகன் தனது பெரியப்பா என்றுதான் அழைத்து வந்தார் ஸ்டாலின். இப்போது இருவருமே இல்லையே நான் என்ன செய்வேன் என்று ஏக்கத்தோடு ஒரு கவிதையை ஸ்டாலின் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், அன்பழகனின் குடும்பத்தில் ஒருவராக, கடும் கூட்டத்தையும் பொருட்படுத்தாது, ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் நடந்து சென்றது தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.