"ரவுடிகளை வைத்து மிரட்டறீங்களா".. ஒரு பக்கம் ஸ்டாலின், மறுபக்கம் கனிமொழி.. தூத்துக்குடியில் சிக்கல்!
சென்னை: கனிமொழி ஒரு பக்கம், ஸ்டாலின் மறுபக்கம் என அதிமுக அரசை கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. "ரவுடியிசம்" என்று திமுக தலைவர் குற்றஞ்சாட்டினால், "உள்துறைக்கு பொறுப்பான முதல்வரின் கட்டுப்பாட்டில் போலீஸ் இருக்கிறதா இல்லையா?" என்று கனிமொழி கேள்வி எழுப்புகிறார்.
தூத்துக்குடி தட்டார்மடம் பகுதியை சேர்ந்த செல்வன் குடும்பத்தினருக்கும் அந்த பகுதியின் உசரத்துக்குடியிருப்பை சேர்ந்த அதிமுகவின் மாவட்ட வர்த்தக அணிச் செயலாளரான திருமணவேலுவுக்கும் நிலம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது... இரு தரப்புமே போலீசில் புகார் செய்த நிலையில், இறுதியில் செல்வம் மற்றும் அவரது சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், தனக்கு நியாயம் வேண்டி மதுரை ஹைகோர்ட்டில் செல்வன் முறையிட்டார்.. கடந்த 17ம் தேதி செல்வம் சொக்கன் குடியிருப்பிற்கு தனது பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் அவரது கார் மீது மோதியதில் அவரை கீழே விழ செய்து, பிறகு தாங்கள் வந்த காரிலேயே கடத்தியும் சென்றது.. செல்வன் உயிர் பிரியும்வரை உருட்டுக் கட்டைகளாலேயே தாக்கி கொன்றதாகவும் கூறப்படுகிறது.
"சூர்யா".. சரியாதானே சொல்றார்.. நிச்சயம் மாற்றத்தை அவர் தருவார்.. "இளம் காளைகள் கட்சி" பரபர அறிக்கை
போஸ்ட் மார்ட்டம்
அதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட செல்வனின் உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்தனர்.. இந்த போராட்டத்துக்கு திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவு தந்தார்.. அந்த குடும்பத்தையும் நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார். இதையடுத்து, அனிதா ராதாகிருஷ்ணனின் கார் நடுராத்திரி அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
கனிமொழி
இதற்குதான் எம்பி கனிமொழியும், முக ஸ்டாலினும் அதிமுக அரசை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்து வருகின்றனர். ஸ்டாலின் அறிக்கையில், "அடுத்தடுத்து நடைபெறும் அராஜகங்கள் - அந்த மாவட்டம் இன்னும் தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா - அல்லது அதிமுக - ஒரு சில உள்ளூர் போலீசார் கூட்டணியால் தனித் தீவாக மாறி விட்டதா?
அனிதா ராதாகிருஷ்ணன்
அப்பாவி இளைஞரை பறிகொடுத்த குடும்பத்திற்கு ஆதரவு தெரிவிப்போர் அனைவரும் மிரட்டப்படுவதும் , திமுகவின் சட்டமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் மீது நள்ளிரவில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலும் கொலையை மறைக்க அரங்கேற்றப்படும் கொடும் நிகழ்வுகளாகவே தெரிகிறது.. நியாயம் கிடைக்க பாடுபடுவோரை "ரவுடியிசம்" மூலம் அச்சுறுத்தத் துணை போவது, செல்வம் கொலையில் மேலும் பிடிபடாமல் உள்ள "உண்மையான குற்றவாளிகள்" வேறு யார் என்ற கேள்வியை எழுப்புகிறது" என்று காட்டமாகவே கூறியுள்ளார்.
ஹரிகிருஷ்ணன்
அதேபோல, கனிமொழி தனது ட்வீட்டில், "தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டத்தை சேர்ந்த, செல்வன் என்பவர் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை... ரவுடிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறையே ரவுடிகளின் கூடாரமாகி விட்டதோ என்ற ஐயம் எழுகிறது. உள்துறைக்கு பொறுப்பான முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா இல்லையா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
குடைச்சல்
அதிமுகவுக்கு எதிர்க்கட்சியின் இந்த கண்டனங்கள் பெரும் குடைச்சலை ஏற்படுத்தி வருகிறது.. ஒருமுறை அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி தரும்போது, "கொலை, கொள்ளை போன்ற குற்றம் சம்பவங்களில் ஒருபோதும் அதிமுக ஈடுபடாது... திமுக தான் ஈடுபடும்... மேலும் திமுக ஒரு ரவுடி கட்சி.. ஸ்டாலின் என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் சரி, அரசு மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை போக்க முடியாது" என்றார்.
ரவுடி கட்சி
இப்படியேதான் ஒருமுறை கருணாநிதி சொல்லும்போது, "செயலற்ற ஜெயலலிதா ஆட்சியில் ரவுடிகளின் கூடாரமாகிறது தமிழ்நாடு" என்றார். இப்படி மாறி மாறி 2 தரப்பும் ஒருவரையொருவர் ரவுடி கட்சி என்று சொல்லி கொண்டாலும், இரு கட்சிகளிலுமே வன்முறை நிகழ்ந்து வந்ததும், தற்போதும் நிகழ்கிறது என்பதுதான் உண்மை!
முருகன்
இதில் இன்னொரு வேதனை என்னவென்றால், அதிமுக, திமுகவுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு தமிழக பாஜகவும் வந்துவிட்டது.. கையில் கத்தி, வீச்சரிவாளுடன் கட்சியில் வந்து சேர்ந்து உறுப்பினர்கள் சேர்கிறார்கள்.. இதை பற்றி கேட்டால், ரவுடிகளை எல்லாம் திருத்த போவதாக முருகன் சொல்கிறார்.
பென்னிஸ் மரணம்
இன்னும் பென்னிக்ஸ் மரணத்துக்கு நமக்கு விடையே கிடைக்கவில்லை.. இப்போது செல்வன் மரணமும் விஸ்வரூபமெடுத்து வருகிறது.. தேர்தலுக்கு இன்னும் கொஞ்சம் நாளே இருக்கும் நிலையில், அதிமுகவை கேள்வி கணைகளால் துளைத்தெடுத்து வருகிறது திமுக!