லடாக் மோதல் விவகாரம்: பிரதமர் தலைமையில் துவங்கிய அனைத்துக்கட்சி கூட்டம்.. சோனியா, ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை: சீனா விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் மாலை 5 மணிக்கு துவங்கிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் அக்கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார். திமுக சார்பில், அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்றுள்ளார்.
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்தியா-சீனா ஆகிய இரு நாட்டு ராணுவத்தினரும் மோதிக் கொண்டதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தனர்.
இந்த நிலையில் எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து விவாதிக்க இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது.
திருப்பி அனுப்புங்கள்.. சீனா சிறைபிடித்த 10 இந்திய வீரர்கள்.. அதிரடியாக மீட்பு.. எப்படி நடந்தது?
வீடியோ கான்பரன்ஸ்
வீடியோ வாயிலாக நடைபெறும் இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். அதேநேரம், சில அரசியல் கட்சிகள் தங்களை அழைக்கவில்லை என கூறியுள்ளன. இன்று மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் துவங்கியது.
பன்னீர் செல்வம், ஸ்டாலின்
இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார். திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். பொதுவாக டி.ஆர்.பாலு எம்.பி.தான், இதுபோன்ற கூட்டங்களில் பங்கேற்பார். இது முக்கியமான ஆலோசனை என்பதால், ஸ்டாலினே பங்கேற்றுள்ளார்.
சோனியா காந்தி
காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, மகாராஷ்டிரா முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, என்சிபி தலைவர் சரத் பவார், இடது தலைவர்கள் சீதாராம் யெச்சூரி மற்றும் டி ராஜா ஆகியோரும், இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அழைப்பு இல்லை
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இந்த, வீடியோ கான்பரன்சிங் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு பற்றி மோடி நடத்திய முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில், மமதா பங்கேற்கவில்லை. அதேநேரம், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர்கள், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தங்கள் கட்சி அழைக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.